மழை பெய்தது... மக்கள் மனம் குளிர்ந்தது.... குற்றால அருவியில் கொட்டுகிறது தண்ணீர்!
Recommended Video

நெல்லை: மண்டையைப் பிளக்கும் வெயிலுக்கு நடுவே மனதிற்கு இதமாக நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடையை கொண்டாடுவதற்கு ஏதுவாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதே போல, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கினர்.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான தென்காசி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பச்சலனம் காரணமாக திடீரென பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றால அருவியிலும் கொஞ்சமாகவும், ஐந்தருவியில் 4 கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கோடையில் தவித்த மக்கள் உற்சாகமாக அருவிகளில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications