போட்டா போட்டி.. நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுத்ததன் காரணம் என்ன? பின்னணி!
நெல்லை: திமுக கூட்டணியில் இந்த முறை நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் ஞானதிரவியம் எம்பியாக உள்ள இந்த நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு விட்டு கொடுத்தது ஏன்? என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பார்க்கலாம்.
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இதன்படி, புதுச்சேரி, திருவள்ளூர் தனி, கடலூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளை திமுக காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது.

கடந்த முறை தேனி, ஆரணி, திருச்சி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததது. ஆனால், இந்த முறை அந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக இம்முறை திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருச்சி தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. திமுகவின் ஞானதிரவியம் எம்பியாக உள்ள இந்த நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு விட்டு கொடுத்தது ஏன்? என்று இங்கே பார்க்கலாம்.
திருநெல்வேலி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் ஞான திரவியம் உள்ளார். ஞான திரவியம் செயல்பாடு சரியில்லை என்று நெல்லையில் இருந்தே திமுக தலைமைக்கு புகார் பறந்தது. அதுமட்டும் இன்றி தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பொறுப்பில் இருந்த ஞான திரவியம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.
குறிப்பாக மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக ஞானதிரவியத்திடம் இருந்து திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்படி அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க திமுக தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேபோல் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவுக்கும் நெல்லையில் சீட் கேட்டு திமுக தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் நெல்லை தொகுதியை ஞானதிரவியத்திற்கு கொடுப்பதா? இல்லை அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவுக்கு வழங்குவதா? என திமுகவிற்கு குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிவிடலாம் என திமுக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. எனினும் நெல்லையில் பாஜக அல்லது அதிமுகவில் இருந்து வலுவான வேட்பாளர் களம் இறங்கினால் நெல்லை தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.
காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் விஜய் வசந்த் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. பிரவின் சக்கரவர்த்தி மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு உள்ளது, கரூரில் ஜோதிமணியும், கடலூரில் கே எஸ் அழகிரி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுவையில் வைத்திலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் நாளை மறுநாள் தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications