ஆளுநர் ரவியை தமிழகத்திலிருந்து திரும்பப்பெறக் கோரி போராட்டம்! வரிந்து கட்டி களமிறங்கும் எஸ்டிபிஐ!
நெல்லை: ஆளுநர் ரவியை தமிழகத்திலிருந்து திரும்பப்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார்.
பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ரவியின் பேச்சும், செயல்பாடும் அமைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரைநிகழ்த்திய மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி அவர்களின் மரபை மீறிய, சட்டமன்ற ஜனநாயகத்தை மீறிய செயல் கண்டனத்திற்குரியது.ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு.

ஆளுநர் ஆா்.என்.ரவி
ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி அவர்கள் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, சிலவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் மரபை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்கக்கூடிய நடவடிக்கைகளில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுநரே இதுபோன்று நடந்து கொள்வது அரசியல் மாண்புகளுக்கு எதிரானது.

வன்மையாக கண்டிக்கிறது
நேற்று ஆளுநர் மாளிகையில் ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். அவர்கள் தான் உங்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று, கூட்டாட்சிக்கு விரோதமாக நிர்வாக ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளார். மட்டுமின்றி ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் இருந்து தமிழ்நாடு என்கிற வார்த்தையையும், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையும் நீக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

திரும்பப்பெற வேண்டும்
ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக இவ்வாறு பேசுவது என்பது சட்டவிரோதமானது. ஆகவே, ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

மிகப்பெரும் போராட்டம்
தமிழக ஆளுநரின் தொடரும் இத்தகைய அரசியலைமைப்பு விரோத போக்கை கண்டித்தும், ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications