செந்தில்பாலாஜிக்கு எப்போது அறுவைச் சிகிச்சை? 8 நாட்களாக இழுக்க வேண்டிய அவசியம் என்ன? -சீமான்
நெல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டு ஏழு, எட்டு, நாட்களாக இழுக்க வேண்டிய அவசியம் என்ன என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சீமான், அங்கு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
செந்தில்பாலாஜியை பொறுத்தவரை அவர் தனக்கு தம்பி தான் என்றும் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலம் பெறட்டும் என்று தான், தாம் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்காக செந்தில்பாலாஜியின் உடல்நலத்தை காரணம் காட்டி புனிதர் பட்டத்தை தேடிக்கொள்ளும் முயற்சியை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்தார். இதன் மூலம் அடித்த கொள்ளை, செய்த ஊழல், பெற்ற லஞ்சம் என எதுவும் கவனத்தில் வராது என நினைக்கிறார்கள் போல் என விமர்சித்தார்.
செந்தில்பாலாஜிக்கு முடியல முடியல என்கிறார்கள் அவரால் நாங்கள் பட்ட துயரத்தை சொல்ல முடியல என கலாய்த்த சீமான், செந்தில்பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சை செய்தால் அதனை நேரலையில் ஒளிப்பரப்புமாறு தெரிவித்தார். செந்தில்பாலாஜியிடம் தான் சாவி இருப்பதாகவும் அதனை திறந்தால் மொத்தமாக எல்லோரும் மாட்டிக் கொள்வார்கள் எனவும் கூறினார்.
மேலும், என்னிடம் என்ன காசு பணமா இருக்கு கொடுப்பதற்கு என வினவிய சீமான், நடப்பதற்கு கால்களும், பேசுவதற்கு வாயும், சொல்வதற்கு கருத்துக்களும் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை டிசம்பர் மாதம் கூட நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications