அவர் மாற்று ஜாதிக்காரர்! என் அக்காவை காதலிப்பது பிடிக்கவில்லை! ஐடி ஊழியர் கொலை குறித்து சுர்ஜித்
நெல்லை: ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், என் அக்காவுடன் பழகியது எனக்குப் பிடிக்காததால் கொலை செய்தேன் என இளைஞர் சுர்ஜித் அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை அளித்துள்ளார். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் தனது அக்காவைக் காதலிப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், காதலை விட்டுவிடுமாறு பலமுறை கூறியும் கேட்காததால் ஆத்திரத்தில் கொன்றதாகவும் சுர்ஜித் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28). இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின்குமாரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.
இதனால் பயந்த கவின்குமார், உயிரைக் கையில் பிடித்து ஓடினார். ஆனாலும் அந்த இளைஞர், கவினை துரத்திப் பிடித்து சரமாரியாக வெட்டினார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவின்குமார் அதே இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயர் சுர்ஜித் எனக் கூறினார். அவருடைய தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார். அதுபோல் அவருடைய தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார். கவின்குமார் கொலை குறித்து சுர்ஜித் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: "நானும் எனது மூத்த சகோதரியும் தூத்துக்குடியில் படித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது அதே பள்ளியில் கவின்குமாரும் படித்து வந்தார். அவர் என் அக்காவுடன் நண்பராகப் பழகினார். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்குச் சென்றபோது அவர்களது நட்பு காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தபோதிலும் அவர்கள் காதலிப்பதை நிறுத்தவில்லை.
நாங்கள் பலமுறை கவின்குமாரிடம் பேசியும் அவர் என் சகோதரியுடன் பழகுவதையும் பேசுவதையும் நிறுத்தவே இல்லை. எனது சகோதரி சித்த மருத்துவராக உள்ளார். அவர் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள சித்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவரைப் பார்ப்பதற்காகவே தனது உறவினர்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து எனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து எனது சகோதரியிடம் நான் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. அவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் என் அக்காவைக் காதலிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கவின்குமார், தனது தாத்தாவுடன் என் சகோதரி பணியாற்றும் மருத்துவமனைக்கு வந்து அக்காவுடன் பேசியதை அறிந்தேன். இதனால் ஆத்திரமடைந்த நான், அவர் வீடு திரும்புவதை அறிந்து அவரை வெட்டப் பாய்ந்தேன். ஆனால் அவர் என்னிடம் இருந்து தப்ப முயன்றார்.
ஆனாலும் நான் விடாமல் விரட்டி வெட்டிவிட்டேன். அவர் உயிர் போனதை உறுதி செய்துகொண்டுதான் அங்கிருந்து நகர்ந்தேன். நான் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக நானே காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தேன்." இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications