தனியார் ஹாஸ்பிட்டலுக்கு நோயாளி மாற்றம்! கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம்
நெல்லை: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளியை வலுக்கட்டாயமாக தனியார் மருத்துவமனனைக்கு மாற்றியதாக அரசு மருத்துவருக்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் தென் மாவட்டங்களுக்கான மனித உரிமை மீறலுக்கான வழக்குகள் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண் நோயாளியை கட்டாயமாக மாற்றியதாகக் குற்றம்சாட்டிய இராணுவ வீரரின் மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய (SHRC) உறுப்பினர் வி.கண்ணதாசன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவரையும், மருத்துவ பணியாளர்களையும் கடுமையாக கண்டித்தார்.
ராணுவ வீரர் மனு
2019 ஆம் ஆண்டு, இராணுவ வீரர் எஸ்.கருப்பசாமி அளித்த மனுவில், கோவில்பட்டி மாவட்ட தலைமையக அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் டாக்டர் சி. பிரபாகரன், தீக்காயங்களுக்குள்ளான அவரது மனைவி ஜெயாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, தன்னுடைய 'ஜெய் பிரைவேட் ஹாஸ்பிடல்' என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென அழுத்தம் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
ரூ.11 லட்சம் செலவு
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக ரூ.11 லட்சம் பல கட்டங்களாக வசூலிக்கப்பட்டதுடன், முறையான சிகிச்சை வழங்கப்படாததால் அவரது மனைவி உயிரிழந்ததாகவும், அவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் வழங்கப் போவதாக SHRC மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன் தெரிவித்தார். மேலும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை எனக் குறிப்பிட்டு, டாக்டர் பிரபாகரன், விசாரணைக்கு தொடர்ந்து வராமலிருந்ததையும் கண்ணதாசன் கண்டித்தார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை
அதேவேளை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் சூப்பிரடென்ட்டாக பணியாற்றும் டாக்டர் கமலவாசனை அவர் கேட்டதற்கு, ஜெயா என்கிற நோயாளி "மருத்துவ ஆலோசனைக்கு விரோதமாகவே" டிஸ்சார்ஜ் பதிவு செய்யப்பட்டது என பதில் வந்தது. விசாரணைக்கு ஆஜராகியிருந்த இரு நர்ஸ்கள், டாக்டர் பிரபாகரன் தங்கள் மேல் அழுத்தம் செலுத்தி, தனது பிடிவாதத்துக்கேற்ப மருத்துவ பதிவுகளை மாற்றச் சொன்னதாகவும் தெரிவித்தனர்.
தீக்காயங்கள்
"நவம்பர் 2018ல், என் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளானபோது, நான் விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்தேன். நான் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அப்போது டாக்டர் பிரபாகரன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில், அவர் 10 நாட்களுக்கு விடுப்பு செல்லப் போவதாக கூறி, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ஆலோசனை வழங்கினார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், அவரது மருத்துவமனை சார்பில் இருவர், என் உறவினர்களை நம்பச் செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் என் மனைவியை 'ஜெய் பிரைவேட் ஹாஸ்பிடல்'க்கு மாற்றினர். அங்கு சிகிச்சை தரவில்லையே தவிர, என் மனைவி உயிரிழந்துவிட்டார்" என தனது மனுவில் கருப்பசாமி குறிப்பிட்டார்.
தனியார் மருத்துவமனை
இதையடுத்து, ஜெய் பிரைவேட் ஹாஸ்பிடலை மூடவேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
மாற்றுப் பணி தண்டனையா
மனித உரிமை ஆணையத்திடம் பதிலளித்த அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், டாக்டர் பிரபாகரனை, ஒழுக்கக்கேடு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவுக்கு மாற்றியிருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த SHRC உறுப்பினர் கண்ணதாசன், "இது ஒழுக்க நடவடிக்கையாகக் கருத முடியாது; மாற்றுப்பணி என்பது தண்டனை அல்ல" எனக் கண்டித்து, அரசு மருத்துவமனை தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) விதிமுறைகளை பின்பற்றத் தவறியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
மருத்துவத் துறை
இந்த வழக்கு, அரசு மருத்துவத் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் முக்கிய சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. நோயாளியின் சிகிச்சை பெறும் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையில், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரது கோரிக்கையாகும்.
சிகிச்சை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் எனது தனியார் மருத்துவமனைக்கு வர வேண்டும் என அழைத்துச் சென்ற மருத்துவரின் நடவடிக்கை மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்க போகும் தீர்ப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications