அரசு சொல்வதை கேட்பதுதான் ஆளுநர் வேலை.. திருமுருகன் காந்தி காட்டம்
Recommended Video
நெல்லை: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர், அரசியல் சாசனத்திற்கு புறம்பாக நடந்து வருவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த திருமுருகன் காந்தி கூறியதாவது: ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு சொல்வதை கேட்டு நடப்பதுதான் ஆளுநரின் பணி. அதை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டு உள்ளார்.
7 தமிழர் விடுதலை தள்ளிப்போடப்படுகிறது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர். தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது சட்ட விரோதமானது.
கஜா பணிகளுக்குப் போதிய நிதியை தமிழக அரசு கோரவில்லை. ஏற்கனவே கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இம்முறை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து உரிய முறையில் நிதி உதவி கேட்கவில்லை.
ஒக்கி, வர்தா புயல், வறட்சி பாதிப்பு போன்றவற்றுக்கு எல்லாம் நிவாரணமாக தமிழக அரசு கேட்டது 70 முதல் 80 ஆயிரம் கோடிகள் ஆகும். ஆனால் மத்திய அரசு வழங்கியுள்ளது 7 ஆயிரம் கோடியைத் தாண்ட வில்லை.
டெல்டா மாவட்டங்களில், கஜா புயலால் வீழ்ச்சியடைந்த, 40 லட்சம் தென்னை மரங்களுக்கு மட்டுமே 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நஷ்ட ஈடு தர வேண்டியுள்ளது. எந்த அடிப்படையில் எடப்பாடி அரசு வெறும் 15 ஆயிரம் கோடியை நிதி உதவியாக கோரியது என்பதே புரியவில்லை.
மத்திய அரசு கொடுக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது பட்சம். முதல் கட்டமாக தமிழக அரசு நியாயமான கோரிக்கை வைக்கவில்லை. இது கண்துடைப்பாக உள்ளது.
தமிழ்நாடு முழுக்க மே 17 இயக்கத்திற்கு கடுமையான அடக்குமுறைகளை பரிசளிக்கிறார்கள். எங்குமே கருத்தரங்குகள் நடத்துவது, கூட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பது கிடையாது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று தான் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில் உள்ளோம். இதை வைத்துப் பார்த்தால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. சர்வாதிகார ஆட்சி மாதிரி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் அந்த கட்சியை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். இன்னமும் அதிமுக அரசு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்பட்டால் மக்கள் இவர்களை ஒதுக்கி விடுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.