ஹேப்பியா..நெல்லை டூ தென்காசி இனி மின்னல் வேகத்தில் சீறப்போகும் ரயில்..121கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம்
நெல்லை டூ தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்களை அதி வேகத்தில் இயக்குவதற்காக 121 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.
நெல்லை: நெல்லை டூ தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்களை அதி வேகத்தில் இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி 121 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இதன் மூலம் நெல்லையில் இருந்து தென்காசி செல்ல பயண நேரம் 50 நிமிடமாக குறையும்.
சென்னையில் பணி நிமித்தமாகவும், கல்வி, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக வெளி மாவட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்ட மக்களும் சென்னையில் கணிசமான அளவில் உள்ளனர்.
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், பேருந்துகள் தினமும் கூட்டம் நிரம்பி வழியும்.பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

ரயில் பயணம்
பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால், மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால், தென் மாவட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களில் கூட டிக்கெட்டுகள் இருக்காது. குறைந்தபட்சம் ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இந்த ரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்தால் தான் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. தெற்கு ரெயில்வேயில் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது.

நெல்லை-தென்காசி
தென் மாவட்டங்களில் நெல்லையில் இருந்து தென்காசிக்கு வழித்தடத்திலும் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் காணப்படும். இந்த வழித்தடத்தில் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்கின்றன. இதனால், காலதாமதம் ஏற்படுவதால் பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் மற்றும் பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

121 கிலோ மீட்டர் வேகத்தில்
நெல்லை - தென்காசி இடையேயான 64 கி.மீட்டர் நீளம் கொண்ட வழித்தடம் 2012- ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டாலும் 70 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயங்கி வருகிறது. இதனால், இந்த வழித்தடத்தில் அதிகரிக்கும் வகையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை மணிக்கு 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.

பயணிகள் மகிழ்ச்சி
அதன்படி, இன்று காலை 10.20 மணிக்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. காலை 10.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட ரயில் தென்காசி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அதிவேக சோதனை ஓட்டத்திற்கு பிறகு நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பயண நேரம் கணிசமாக குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயண நேரம் குறையும்
அந்த வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயண நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், நெல்லை - திருச்செந்தூர் இடையே வரும் 15 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை- தென்காசி, மற்றும் நெல்லை - திருச்செந்தூர் ஆகிய இடங்களில் ஆன்மீக தலங்களும் அதிகமாக உள்ளதால் பயணிகள் கூட்டம் இந்த வழித்தடத்தில் அதிகமாக இருக்கும். எனவே அதிவேகமாக ரயில்கள் இயக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications