சொர்கமே என்றாலும்.. சொந்த ஊரைப் போல வருமா! தமிழ் முறையில் பிரான்ஸ் மணமகன்களை கரம் பிடித்த சகோதரிகள்
திருநெல்வேலி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களுக்குத் தமிழ் முறைப்படி நடந்த திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மாசிலாமணி ஆனந்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றனர்.
அதன் பின்னர் இந்தியாவுக்குத் திரும்பாமல் அவர்கள் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மாசிலாமணி பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மேனேஜராக உள்ளார்.
ஆபத்து.. இலங்கை வந்த சீன உளவுக் கப்பல் இந்தியாவுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்? டாப் 4 காரணங்கள்
பிரான்ஸ் தம்பதி
இந்த தம்பதிக்கு பிரான்ஸ் நாட்டிலேயே காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்கள் கல்வி தொடங்கி அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தான் இருந்துள்ளது. மூவருமே அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களைக் காதலித்து இந்த மூன்று சகோதரிகளும் அவர்களையே கரம்பிடிக்க விரும்பியுள்ளனர்.
திருமணம்
தங்கள் காதலைப் பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்களும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், ஒரே கன்டிஷனாக பிள்ளைகளுக்குத் தமிழ் முறையில் திருமணம் நடத்த வேண்டும் என மாசிலாமணி ஆனந்தி தம்பதி விரும்பியுள்ளனர். அதன்படி மூன்று பேருக்கும் உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மகள்களின் திருமணத்தில் உறவினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் இருக்கும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் கலாசாரம்
அதன்படி இன்றைய தினம் மாசிலாமணி -ஆனந்தி தம்பதியினர் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. மூவருக்கும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. காயத்ரி - ஜார்ஜ், கீர்த்திகா- ராம்குமார், நாராயிணி- மஜ்ஜூ மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். தமிழ் கலாச்சார முறைப்படி வெளிநாட்டவருக்கு நடைபெற்ற இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தாயார் ஆனந்தி
இது தொடர்பாகத் தாயார் ஆனந்தி கூறுகையில், "வெளிநாட்டில் பிறந்து அந்த கலாசாரத்திற்கு ஏற்ப வளர்ந்து இருந்தாலும், நமது தமிழர் பாரம்பரியம் நீண்ட நெடியது. தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாகவும் தங்கள் 3 பிள்ளைகளும் வாழ வேண்டும் என்பதற்காகவே, தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்தோம். வெளிநாட்டில் வளர்ந்தாலும் மூன்று பெண்களுக்கும் தமிழ் கலாசாரத்தை ஊட்டியே வளர்த்தோம். இரு நாட்டு கலாசாரமும் ஒன்றிணைக்கும் வகையில் இந்தத் திருமணத்தை நடத்தி உள்ளோம்" என்றார்.
மகமகன்
வெளிநாட்டு முறையில் திருமணத்தை நடத்துவதை விட தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக மணமகன் மஜ்ஜூ தெரிவித்தார். தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதை உணர்வதாகவும் உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பல கலாசாரங்களை ஒன்றிணைக்கும் சக்தி அன்புக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.