மின்னுதே.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையம் டிச., திறக்க வாய்ப்பு
திருநெல்வேலி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையம் அடுத்த மாதம் (டிசம்பரில்) திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருநெல்வேலியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் (ஜங்ஷன்) என இரண்டு முக்கிய பஸ் நிலையங்கள் உள்ளன. புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஜங்ஷன் என அழைக்கப்படும் திருநெல்வேலி பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பழைய ஜங்ஷன் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு மொத்தம் ரூ.78 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பழைய பஸ் நிலையம் கடந்த 2018ல் இடிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது.
4 ஏக்கர் பரபப்பளவில் பஸ் நிலையத்திலேயே வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன முறையில் இந்த பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து கட்டுமான பணி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. முறையான அனுமதி பெறவில்லை. பஸ் நிலையத்தில் தோற்றம் மாறுபடுகிறது என பல பிரச்சனைகளை சந்தித்தது.

இதனால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. அதோடு பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஜங்ஷன் பஸ் நிலையத்தை பயன்படுத்தி மக்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் அவ்வப்போது பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையம் டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலில் இந்த பஸ் நிலையத்தை 2020-2021ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தை கட்டுமானம் தொடங்கிய நிலையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இதனால் இந்த திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாமல் போனது. இந்நிலையில் தான் 6 ஆண்டுகளுக்கு பிறகு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக வந்த தகவலால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications