திருநெல்வேலி முருகாண்டி வீட்டில் ஆச்சரியம்.. பதுக்கிய மூட்டையை பிரித்து பார்த்தால்? ஆடிப்போன நெல்லை
திருநெல்வேலி: மங்களூர் வங்கி ஊழியர்களை மிரட்டி சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்ற கும்பலிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் வீட்டில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.சி. ரோடு பகுதியில் விவசாய கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.. கடந்த 17ந் தேதி காலை 11.30 மணி அளவில் முகமூடி அணிந்திருந்த கும்பல் கைத்துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் இந்த வங்கிக்குள் நுழைந்துள்ளது.

அந்த கும்பல் அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தையும் அள்ளி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த உல்லால் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 6-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையையும் நடத்தினார்கள்.
கொள்ளை சம்பவம்: இதனிடையே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் வழியாக தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திற்குள் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மங்களூரு தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம் அம்பையில் முருகாண்டி (36), ஜோஸ்வா ஆகிய 2 நபர்களை கடந்த 21ம் தேதி கைது செய்தனர். அவர்களை இருவரையும், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு மங்களூருக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.. இதில், சுமார் 18 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. தொடர்ந்து முருகாண்டிக்கு தொடர்புடைய இடங்களில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
தங்கம் பறிமுதல்: 18 கிலோ தங்கம், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி, முருகாண்டியின் 65 வயதான தந்தை சண்முக சுந்தரத்திடம் போலீசார் விசாரித்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.. முருகாண்டி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு மங்களூருவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை கைதாகியிருக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருமே மும்பையில் பல வருடங்களாகவே வசித்து வருகிறார்களாம்.. தனிப்படை போலீசார் முதலில் மும்பையில் கண்ணன் மணி என்பவரை கைது செய்திருந்தனர். அவர் சொன்ன தகவலின் அடிப்படையில்தான், நெல்லையில் பதுங்கியிருந்த முருகாண்டி, ஜோசுவாவை கைது செய்தனர்.. இந்த வழக்கில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருக்கிறதாம்.
பதிவெண் நம்பர்: ஏற்கனவே, முருகாண்டி, ஜோஸ்வாவிடமிருந்து 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், மும்பை பதிவெண் கொண்ட கார், இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ நகைகள் கைது செய்யப்பட்டுள்ளது, மங்களூர் வங்கி வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications