திருநெல்வேலியில் 2024ல் போக்சோ வழக்குகளில் 100 பேர் கைது! காவல்துறை பகிர்ந்த ஷாக் தகவல்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024ம் ஆண்டு போக்சோ வழக்குகளில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த விவரத்தை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்குகள்: செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நெல்லை மாவட்டத்தில் 2024ல் மட்டும், பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 203 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில், 96 ரவுடிகள், 34 பேர் கஞ்சா வழக்கிலும்,18 பேர் கொள்ளை, திருட்டு வழக்கிலும், 04 பேர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருநெல்வேலியில் சாதி ரீதியாக கொலைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2023ஐ விடவும் 2024ம் ஆண்டில் கொலை வழக்குகள் குறைந்திருக்கின்றன.
இதற்கு காரணம் காவல்துறை எடுத்த முன்னெடுப்புகள்தான். குறிப்பாக சாதிய மோதல் பதற்றமான பகுதிகளில் உள்ள பள்ளிகள் காவல்துறையின் கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டன. மட்டுமல்லாது உளவு தகவல்களை தொடர்ந்து சேகரித்ததே பெரிய அளவில் குற்றங்களை தடுக்க எங்களுக்கு உதவியது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சிறப்பு கவனம் கொண்டிருந்தோம்.
கொலை குற்றங்களை பொறுத்த அளவில் 21% குறைந்திருக்கின்றன. 13 கொலை குற்றங்களில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டிருக்கிறது. 69 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஈரோட்டில் எவ்வளவு வழக்குகள்?: நெல்லையை தொடர்ந்து ஈரோட்டில் சுமார் 270 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், இவர்களில் 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் 6,444 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. காவல்துறை உதவி செயலியை 12,910 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொலை குற்றங்கள் கடந்த 2023ஐ விட, 2024ம் ஆண்டில் குறைந்திருக்கிறது. அதாவது 2023ல் 33 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், 2024ல் வெறும் 28 கொலைகள்தான் நடந்திருக்கின்றன. 28 கொலைகளில் 7 கொலைகள் குடும்ப தகராறு காரணமாக நடந்திருக்கு. மொத்தமாக 49 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதர குற்றங்கள்: மற்ற குற்றங்களை பொறுத்தவரையில், மொத்தமாக 378 குற்ற வழக்குகள் பதிவானது. இதில் 517 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட 102 வாகனங்கள் மற்றும் 844 சவரன் தங்க நகைகள் உட்பட ரூ.2.98 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு, அவற்றில் 80% உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாலை விதிமீறல்: சாலை விதிமீறல் வழக்குகளை பொறுத்தவரை, மொத்தம் 1,76,940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. 11,637 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்திருந்தோம். அதில் 9,874 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications