அப்பா இறந்தும் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திய நெல்லை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தற்கொலை முயற்சி
நெல்லை: சுதந்திர தினவிழாவின் போது தன் அப்பா இறந்த செய்தியை தெரிந்தும் சுதந்திர தின அணிவகுப்பை வழி நடத்தி முடித்துவிட்டு தன் அப்பாவின் இறுதி சடங்குக்கு சென்ற திருநெல்வேலி போக்குவரத்து ஆய்வாளர் மகேஸ்வரி, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக மன உளைச்சலால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவின் போது மக்களிடையே பிரபலமாகி உயரதிகாரிகளின் பாராட்டை பெற்றார்.
சுதந்திர தின விழா அணிவகுப்பை மகேஸ்வரிதான் தலைமையேற்று நடத்தினார். அப்போது அவரது தந்தை காலமான செய்தி மகேஸ்வரிக்கு பேரிடியாக வந்தது. இதையடுத்து கடமைதான் முக்கியம் என கருதிய அவர் தனது துக்கத்தை நெஞ்சில் போட்டு புதைத்துக் கொண்டு, கண்ணீர் சுரப்பிகளை மனதளவில் துண்டித்துக் கொண்டு காவல் துறை அதிகாரியாக சுதந்திர தின அணிவகுப்பை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடத்தி கொடுத்துவிட்டு தனது தந்தைக்கு மகளாக வீட்டுக்கு ஓடி சென்றார்.

வைரல்
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரது கடமையுணர்வை எண்ணி உயரதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர். இந்த நிலையில் உயரதிகாரி ஒருவரின் துன்புறுத்தல் காரணமாக இவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆள் பற்றாக்குறை
பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் ஆள் பற்றாக்குறை அதிகளவு இருப்பதால் போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமை ஏற்படுவதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் குடியிருப்பு, ஏராளமான கல்வி நிலையங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கும் பகுதி என்பதால் பாளையங்கோட்டை எப்போதுமே மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகவே இருக்கும்.

போக்குவரத்து காவல் துறை
இப்படியிருக்கும் நிலையில் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிக குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர். ஏற்கனவே நெல்லை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளின் டார்ச்சர் இருப்பதாகவும் இதனால் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

பாளையங்கோட்டை
போலீஸார் மன உளைச்சலில் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம் "தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக" சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது. இருப்பினும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் நெல்லை மாநகரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயரதிகாரி மீது மகன் புகார்
குறிப்பாக ஹைகிரவுன்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி கடந்த மாதம் 27 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரி திட்டியதன் காரணமாகவே பழனி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவலர்களுக்கு வார விடுமுறை நெல்லை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மகேஸ்வரி தற்கொலைக்கு முயற்சி
இதுபோன்ற சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாநகர காவல் துறையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவுப் பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். காவல்துறையில் நற்பெயர் எடுத்த அதிகாரிகள் மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவம் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகேஸ்வரியின் தற்கொலை முயற்சி விவகாரம் பூதாகரமான நிலையில் உளவுத்துறை கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications