எரிந்த நிலையில் கிடைத்த டார்ச் லைட்.. மர்மமாக உயிரிழந்த ஜெயக்குமார் கடைசியாக வாங்கியது இதுதானா?
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், அவர் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் 4 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரியவந்தது.

ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலின் உறுப்புகள் உடற்கூராய்வில் மிகவும் கவனமாக ஆராயப்பட்டது.
இறந்து கிடந்த ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடலை எரித்தால் தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் மீண்டும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் இதுதானா என விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. ஜெயக்குமார் எந்த பதற்றமும் இன்றி டார்ச் லைட் வாங்கிச் சென்றதாக கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications