மோதியதால் கார் பேனட்டில் படுத்த இளைஞர்.. 200 மீட்டர் இழுத்துச்சென்ற நெல்லை சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்!
நெல்லை: நெல்லை அருகே பைக் ஓட்டுநரை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பைக்கில் எஸ்.ஐ ஓட்டி வந்த கார் மோதிய நிலையில் நீதி கேட்டு அவர் காரின் பேனட்டில் படுத்துள்ளார். அவரை சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார் எஸ்.எஸ்.ஐ காந்திராஜன்.
நெல்லை டவுன் கணேஷ் தியேட்டர் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பைக் சேதமடைந்தது. இந்த நிலையில், பைக் ஓட்டுநர் தனது பைக் மீது மோதிய காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காரை ஓட்டி வந்தது போக்குவரத்து காவல் பிரிவு எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கும், பைக் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பைக் உரிமையாளர், முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்றதால் நானும் பைக்கை நிறுத்தினேன், காரை கொண்டு பைக் மீது மோதியதால் தான் பைக் சேதமானது என முறையிட்டார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் கூடியதால், எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் தனது காரை எடுக்க முயற்சித்தார். ஆனால் காரை எடுக்கவிடாமல் பைக் உரிமையாளர் தனக்கு நியாயம் வேண்டும் என கார் பேனட் முன்பு ஏறி படுத்துக்கொண்டு காரை தடுத்து நிறுத்த முயன்றார்.
எஸ்.ஐ காரின் வேகத்தை அதிகரித்து, பேனட் மீது படுத்திருந்த நபருடன் சுமார் 200 மீ தூரம் காரை ஓட்டி சென்றார். கார் பேனட் மீது படுத்த நபர் "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க".. என கூச்சலிட்டவாறே காரின் முன்பக்கம் தொங்கிக் கொண்டே பயணித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து இருசக்கர வாகன ஓட்டியிடம் மோசமான செயலில் ஈடுபட்டதாக போக்குவரத்து பிரிவு எஸ்.எஸ்.ஐ காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து எஸ்.ஐ காந்தி ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பைக்கை ஓட்டி வந்தவர் பெயர் அசோக் குமார் என்றும், அவர் டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்துள்ளது. எஸ்.எஸ்.ஐ காந்தி ராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பைக் ஓட்டுநரிடம் இருந்து புகார் பெற போலீசார் முயற்சி எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications