பைசன் படத்தில்.. கூஸ்பம்ப் பொங்க.. "காளமாடன் கானம்" பாடிய அந்த முறுக்கு மீசை பாடகர் யார் தெரியுமா?
நெல்லை: மாரி செல்வராஜின் "பைசன் காளமாடன்" திரைப்படத்தில், Nivas K. Prasanna இசையில் கூஸ்பம்ப் ஏற்படுத்திய Kaalamaadan Gaanam பாடலை யூட்யூப்பில் பார்த்தவர்களுக்கு முறுக்கு மீசையுடன் கிராமிய களையுடன் பாடிக்கொண்டிக்கும் பாடகர் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும். அவர் ஏற்கனவே புகழ் பெற்றவர்தான் என்றாலும் பைசன் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக ஃபேமஸ் ஆன அந்த பாடகர் வேறு யாருமில்லை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.எம். மஹாலிங்கம்-தான் (V.M. Mahalingam) அவர்.
டிசம்பர் 24, 1982 அன்று பிறந்தவர். நாட்டுப்புறம், பக்தி, மற்றும் திரைப்படப் பாடல்களில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள திறமையான கலைஞர். இசை மரபு கொண்ட குடும்பத்தில் பிறந்த மஹாலிங்கத்தின் தாயார் கும்மிப்பாட்டு பாடியவர்; தாத்தா தெய்வ பாடல் பாடியவர் என்பதால், அவரின் சிறுபிள்ளை பருவமே இசையால் நிறைந்திருந்தது.

2000-ஆம் ஆண்டு மேடை நிகழ்ச்சிகளின் மூலம் தனது இசை பயணத்தைத் தொடங்கிய மஹாலிங்கம், 2009-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் பிளேபேக் பாடகராக அறிமுகமானார். அதன்பின் இந்தியாவைத் தாண்டி கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் 1,500-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடி ரசிகர்களை மயக்கியுள்ளார். பக்தி பாடல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, காளமாடன் பாடலை அவ்வளவு உணர்வு பூர்வமாக பாடியிருப்பார். பலருக்கும் கண்ணைமூடி கேட்டால், தங்கள் குல தெய்வத்தை மனதுக்குள் கொண்டு அமர்த்தும் வகையில் இசையும், மகாலிங்கத்தின் உச்சரிப்பும் அமைந்திருப்பது சிறப்பு.
திரைப்படப் பாடல்கள் மூலம் புகழ் பெற்றவர்
ராகலாபுரம், கொம்பன், சலீம், ரஜினி முருகன், சேதுபதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, டி.இமான், விஜய் ஆன்டனி, தேவா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
யூட்யூப்பிலும் ஹிட்!
அவரின் 'அம்மா' பாடல் யூட்யூப்பில் பல கோடி பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு வெளியான குலசாமி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்
Zee தமிழ் தொலைக்காட்சியின் ராக் ஸ்டார் நிகழ்ச்சியிலும், விஜய் டிவியின் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை போட்டியிலும் முதல் பரிசுகளை வென்றுள்ளார். நாட்டுப்புற இசையின் ஆழத்தை உலக மேடைகளில் ஒலிக்கச் செய்த வி.எம். மஹாலிங்கம், இன்றும் தமிழ் நாட்டு உணர்வை உயிரோட்டமாக பரப்பி வரும் பல்துறை கலைஞராக விளங்குகிறார். சந்தேகமிருந்தால் காளமாடன் கானத்தை மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்களேன்.












Click it and Unblock the Notifications