திருநெல்வேலி.. கொலை செய்தவனை எப்படியெல்லாம் பாராட்டுறாங்க.. விசிக கோரிக்கை.. போலீஸார் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதலிக்க மறுத்ததற்காக சந்தியா எனும் இளம்பெண்ணை கொன்ற குற்றவாளியுடன் போலீசார் பேசும் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்திருந்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.இந்நிலையில் போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மூன்றாவது மகள் சந்தியா .இவருக்கு 18 வயது ஆகிறது. இவர் திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் இயங்கி வரும் பேன்சி கடைக்கு தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று கடைக்குத் தேவையான கூடுதல் பொருட்களை, அதே தெருவில் உள்ள குடோனில் இருந்து எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டார் இந்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த திருநெல்வேலி போலீசார், இளம்பெண் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது கொலை நடந்த இடத்திலேயே கூர்மையான கத்தி இருந்தது.இதை கண்ட போலீசார் அனுபவமில்லாத நபர்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வாய்பு இருந்திருக்க முடியும் சந்தேகித்தனர்.
இதையடுத்து இளம்பெண் என்பதால் காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பக்கத்து கடையில் வேலை செய்து வந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் சந்தியாவுடன் நெருங்கி பழகியதாகவும், நாளடைவில் சந்தியா அவனை வெறுத்து ஒதுக்கியதாகவும் கூறினார்கள்.
மேலும், சந்தியாவுக்கு அச்சிறுவன் காதல் தொல்லை அளித்து வந்ததும், அச்சிறுவன் திருநெல்வே மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துது. எனவே, உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசார் தோப்பூர் சென்று காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து வந்து திருநெல்வேலி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த சிறுவன் போலீசார் நடத்திய விசாரைணையில் சில தகவல்கள் வெளியாகின.இதன்படி குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளான். சந்தியா வேலை பார்த்த கடைக்கு அருகில் வேலைக்கு சேர்ந்துள்ளான். அப்போது சந்தியாவுடன் அடிக்கடி சந்தித்து பேசினார், ஒரு கட்டத்தில் சந்தியாவை விரும்பிய சிறுவன், அவரிடம் சென்று தனது காதலை கூறியுள்ளான். ஆரம்பத்தில் சந்தியாவும் சிறுவனின் காதலுக்கு ஓகே சொன்னாராம்.. ஒருகட்டத்தில் அச்சிறுவன் வேலையை உதறிவிட்டு, சென்னைக்கு சென்று அங்கு வேலையில் சேர்ந்துள்ளான். அதன் பிறகு சந்தியா திடீரென சிறுவனிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். சிறுவன் சென்னைக்கு சென்ற பிறகு, சந்தியா வேறொரு நபரை காதலித்தாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சிறுவன், சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, உன்னை பிடிக்கவில்லை என சந்தியா கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனக்கு கிடைக்காத சந்தியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து அவரை கொல்ல திட்டமிட்டுள்ளான். திருநெல்வேலி டவுனில் சட்டென பெரிய ஆயுதத்தை எடுத்து தாக்கி கொல்ல முடியாது என்பதால் கத்தியை வாங்க முடிவு செய்துள்ளான் சிறுவன். ஆனால் கத்தியை கடைக்கு போய் வாங்கினால் சந்தேகப்படுவார்கள் என்பதால், ஆன்லைன் மூலம் கத்தியை ஆர்டர் செய்ய முடிவு செய்திருக்கிறான் சிறுவன். இதற்காக தனியார் ஆப் ஒன்றில் கூர்மையான கத்தியை வாங்கியுள்ளான்.
பின்னர், கத்தியை எடுத்துக் கொண்டு சிறுவன் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்துள்ளான். சந்தியா தினமும் கடையிலிருந்து குடோனுக்கு செல்வது சிறுவனுக்கு தெரியும் என்பால், அவர் வரும் வரை அங்கேயே காத்திருந்துள்ளான். பின்னர் சந்தியா வந்த உடன், குடோனில் வைத்து மீண்டும் தன்னை காதலிக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளான். அப்போதும் சந்தியா திட்டவட்டமாக சிறுவனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர், சிறுவன் கத்தியை அங்கேயே விட்டுவிட்டு , சொந்த ஊரான தோப்பூருக்குச் சென்றுள்ளான். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்டிருக்கிறான். சிறுவன் இன்னும் 18 வயதை நிரம்பாததால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.
முன்னதாக சிறுவனை கைது செய்யும் போது போலீசார் அவனிடம் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே சிலர் வீடியோவில் ஒரு பாதியை மட்டும் கட் செய்து உலாவவிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக மாநில பொதுச்செயலாளர் வன்னியரசு, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருநெல்வேலியில் காதலிக்க மறுத்ததற்காக கடந்த 2.10.2023 அன்று சந்தியா எனும் இளம்பெண் நடுத்தெருவில் வைத்து கொல்லப்பட்டார். படுகொலை செய்த குற்றவாளியை காவல்துறை கைது செய்தது. ஆனால்,அந்த குற்றவாளியை போலீசார் நடத்திய விதம்,மேலும் படுகொலை செய்ய ஊக்கப்படுத்துவதாகவே உள்ளது.
இந்த வீடியோவை எதற்காக போலீசார் எடுத்தார்கள்? கொலை செய்தவனை எப்படியெல்லாம் பாராட்டுகிறார்கள் என்பதை காணும் போது,
போலீசாரா அல்லது கொலைகாரனின் உறவினரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மரியாதைக்குரிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் இது குறித்து தெளிவு படுத்தவேண்டும். குற்றவாளிகளை பெருமைப்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இதனிடையே இன்னொரு பதிவில் கொலைக்குற்றவாளியை போலீசார் நடத்திய விதம் குறித்தும் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.நமது கோரிக்கையின் ஞாயத்தை ஏற்று சம்மந்தப்பட்ட போலீசாரை பணி இடை நீக்கம் செய்துள்ளார்.மதிப்புமிகு சங்கர் ஜிவால் அவர்களுக்கு நன்றி!இவ்வாறு வன்னியரசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications