5 தொகுதிகளில் ஆதிக்கம்.. நெல்லையை அதிர வைத்த தவெக.. திமுக, அதிமுகவுக்கு பின்னடைவு!
நெல்லை: நெல்லை தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். திமுக, அதிமுக வேட்பாளர்களை விடவும் 988 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.எஸ்.முருகன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இம்முறை தபால் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அரசு ஊழியர்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் தபால் வாக்குகள் பெரியளவில் பிரியும் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 14 தொகுதிகளிலும், தவெக 11 தொகுதிகளிலும், அதிமுக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் முன்னிலையை பெற்றுள்ளார்.
அதேபோல் நெல்லை தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் தொடக்கம் முதலே தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார். திமுக தரப்பில் சு.சுப்பிரமணியனும், அதிமுக தரப்பில் கணேசராஜா போட்டியிட்டனர். தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் இருக்கிறார்.
முதல் சுற்று முடிவில் 988 வாக்குகள் வித்தியாசம் பெற்று தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளார். நெல்லை தொகுதி மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருக்கிறது. சென்னையை போன்றே நெல்லையிலும் தவெக ஆதிக்கம் செலுத்தி வருவது பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications