தாமிரபரணி பாயும் நெல்லையில் குடிக்க தண்ணீர் இல்லை.. குற்றம் சாட்டும் மக்கள்.. காரணம் என்ன?
திருநெல்வேலி: வற்றாத ஜீவநதியாக பாய்ந்து வளம் தரும் தாமிரபரணி பாயும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தாமிரபரணி தண்ணீரை தனியாருக்கு விற்று விட்டு கழிவுநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக காலி குடங்களுடன் காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை மற்றும் தென்காசி தூத்துக்குடி போன்ற அண்டை மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்தி புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கின்றது.

நெல்லை மாநகராட்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தாமிரபரணி ஆறு பாபநாசம் பகுதியில் மட்டுமே குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தும் வகையில் தண்ணீராக உள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியை தாண்டினால் தண்ணீரை குடிக்க முடியாது திருநெல்வேலி பகுதி அடைந்து விட்டால் தண்ணீரை குடிக்கவும் முடியாது குளிக்கவும் முடியாது என்ற நிலை நிலவி வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் பல வகையில் கலக்கப்பட்டு வருகின்றது. கழிவுநீர் கலந்த நீரே தங்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பருவமழை பொய்த்துப்போனதால் கடந்த 6 மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. பாபநாசம் அணையின் நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரியும் சுத்தமான சுகாதாரமான தண்ணீர் வழங்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழிவு நீர் கலந்த குடிநீரை விநியோகம் செய்வதால் அதனை குடிக்கும் தங்களும், தங்களின் குழந்தைகளுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாமிரபரணி தண்ணீரை தனியாருக்கு விற்பனை செய்து விட்டு கழிவுநீரை தங்களுக்கு விநியோகம் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊருடையார் புரம் பகுதியில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
வருடம் தோறும் ஆற்றில் தண்ணீர் செல்வது தான் தாமிரபரணியின் சிறப்பம்சமாகும். ஆனாலும் மாநகராட்சியின் அலட்சியப்போக்கால் மின் மோட்டார்கள் பழுதடைவது, குழாய்கள் பராமரிப்பு என ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி மாநகரின் பல்வேறு இடங்களில் திடீரென குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
காலை நேரத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்வோரும், பள்ளி கல்லூரிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications