நாங்குநேரியில் நடந்தது என்ன...? வசந்த்குமாரிடம் விசாரணை ஏன்?
நெல்லை: நாங்குநேரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான வசந்த்குமார் வாகனத்தை சிறைபிடித்து போலீஸார் விசாரணை நடத்துவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் புறப்பட்ட வசந்த்குமார் எம்.பி. நாங்குநேரி வழியாக சென்றிருக்கிறார். அப்போது அவரது வாகனத்தை மறித்த காவல்துறையினர், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள் ஏன் வாக்குப்பதிவு நாளன்று தொகுதியில் சுற்றுகிறீர்கள் என வினவியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த வசந்த்குமார் எம்.பி., தான் கட்சிகொடி கூட காரில் கட்டவில்லை என்றும், தனது தொகுதியான கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இல்லை அண்ணாச்சி நீங்க இந்த வழியாக போகமுடியாது, என வேறுவழியை போலீஸ் சொல்லியுள்ளது. இதனைக் கேட்ட வசந்த்குமார் இல்லை, நீங்கள் சொல்வது போல் எல்லாம் கன்னியாகுமரி போகமுடியாது நான் திரும்பவும் பாளையங்கோட்டையில் உள்ள இல்லத்திற்கே திரும்பி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வசந்த்குமாரின் கார் ஓட்டுனர் காரை திருப்பி, பாளையங்கோட்டை நோக்கி ஓட்டியிருக்கிறார். அப்போது கலங்கடி என்ற இடத்தில் வசந்த்குமார் வாகனத்தை மறித்த போலீஸ், நீங்க விசாரணைக்கு வாங்க அண்ணாச்சி என நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அங்கு வைத்து அவரிடம் வாக்குப்பதிவு நாளான இன்று ஏன் நாங்குநேரி தொகுதியில் சுற்றினீர்கள் என போலீஸ் விசாரித்திருக்கிறது.
போலீஸ் விசாரணைக்கு வசந்த்குமாரும் உரிய விளக்கம் அளித்துவிட்ட நிலையிலும், அவர் அங்கு தான் அமரவைக்கப்பட்டுளார். இதுவரை வசந்த்குமார் மீது வழக்குப்பதியபடவில்லை. அதற்கு இந்தத் தகவல் அறிந்து நெல்லை மாவட்ட காங்கிரஸார் நாங்குநேரி காவல்நிலையத்தில் குவிந்துவிட்டனர். இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு காவல்நிலையத்தில் இருந்து வசந்த்குமார் அனுப்பிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications