தென்காசி வடக்கு திமுக நிர்வாகிகள் அறிவிப்பு எப்போது? உண்மையில் என்ன நடந்தது? செல்லதுரை தர்ணா காரணமா?
தென்காசி : தமிழகத்தில் உள்ள 71 திமுக கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா செய்ததும், மா.செ நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுமே இந்த நிறுத்தத்திற்கு காரணம் எனப் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆனால், மாவட்ட துணை செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுகவைச் சேர்ந்த விஜய அமுதா எனும் பெண்ணின் வழக்கு காரணமாகவே நிர்வாகிகள் பட்டியலை தலைமை அறிவிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய அமுதா, தனது வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதால், எந்த நேரத்திலும், தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
3வது புள்ளி.. தருமபுரியில் 'பிக்’ மூவ்.. சொல்லியடித்த தலைமை - பழனியப்பனுக்கு பதவி கிடைத்த பின்னணி?
திமுக மாவட்ட கழக நிர்வாகிகள்
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அக்.9 ஆம் தேதி தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது. முன்னதாக, மாவட்டக் கழகத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து நேற்று இரவு மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
தென்காசி வடக்கு
வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் இன்னும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்குக் காரணம், தென்காசி திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதே ஆகும். இதனால், இந்த மாவட்டத்திற்கு மட்டும் திமுக தலைமைக் கழகம் நிர்வாகிகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
2 மோதல்கள் - பின்னணி
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் செல்லதுரை. தென்காசி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வரும் நீண்ட இனிஷியல் கொண்ட அமைச்சர் இந்த முறை, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் சிட்டிங் மா.செ செல்லத்துரை ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொதித்த செல்லதுரை ஆதரவாளர்கள்
இதையடுத்து தென்காசியில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய செல்லதுரை ஆதரவாளர்கள், வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளன்று சென்னை அறிவாலயத்தில் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தாமல் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி தனுஷ் குமாரை மா.செவாக நியமிக்க அமைச்சர் திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினர். தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், அன்பகம் கலை ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பெண் நிர்வாகி தொடர்ந்த வழக்கு
இதற்கிடையே தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஒரு சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால்தான், இந்த மாவட்டத்துக்கு நிர்வாகிகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தலைமைக் கழகம். திமுக நிர்வாகி முத்துக்குமார் என்பவரின் மனைவி விஜய அமுதா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக, தென்காசியில் வைத்து நடத்த வேண்டும், உட்கட்சி சட்டத்திற்கு மாறாக பொறுப்பாளர்களை நியமிக்க தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார்.
என்ன காரணம்? - அக்டோபர் 28
திமுக உறுப்பினரான விஜய அமுதா, தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகிகள் 50 பேரின் ஆதரவு கடிதத்தையும் அவர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், வேறு ஒருவரும் போட்டியிடுவதால் பேச்சுவார்த்தை நடத்துமாறு தலைமையில் இருந்து சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய அமுதா
திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள விஜய அமுதா தனது ஆதரவாளர் இல்லை என்றும், அவர் தனது பதவி தொடர்பாகவே வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் செல்லதுரை தலைமையிடம் தெரிவித்துவிட்டார். மேலும், தலைமையின் வேண்டுகோளை ஏற்று விஜய அமுதாவிடம் வழக்கை வாபஸ் பெறுமாறும் அவர் பேசியுள்ளார். திமுக தலைமை சார்பாகவும் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
வாபஸ் பெற முடிவு
இதையடுத்து, அவர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றம், அவரது மனுவை திருப்பிப் பெற அனுமதி அளித்தபிறகே திமுக தலைமை, அந்த மாவட்டத்துக்கான நிர்வாகிகள் பட்டியலை வெளியிடக்கூடும் என்கிறார்கள். அதேநேரம், அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால், மாவட்ட கழகங்கள் அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் என்பதால் இன்றே கூட நிர்வாகிகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விஜய அமுதா வாபஸ் பெற மனு தாக்கல் செய்துள்ளதால், நிர்வாகிகள் அறிவிப்புக்கு சிக்கல் எதுவும் இருக்காது என்றும் தெரிகிறது.