நெல்லை லோக்சபா தொகுதியை வெல்ல முடியுமா திமுக? சர்ச்சைகள் சூழ் ஞான திரவியம்! யார் இந்த கிரகாம்பெல்?
சென்னை: திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாமிரபரணி பாய்ந்தோடும் வளம்மிக்க தொகுதி திருநெல்வேலி. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம் பவர் பிளான்ட் தொடங்கி, வங்காள விரிகுடா கடற்கரையில் கூடங்குளம் அணுமின் நிலையம் வரையில், பரந்து விரிந்த இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். பீடிசுற்றும் தொழிலில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீன்பிடித் தொழிலாளர்களும் கட்டுமானத் தொழிலாளர்களும் பெருமளவில் வாழ்கிறார்கள். அதிகளவில் இருக்கும் கல்வி நிறுவனங்களால், 'தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டை, பிரசித்திபெற்ற சைவ, வைணவத் தலங்கள், இஸ்ரோ கட்டுப்பாட்டில் செயல்படும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்துதளம், கடற்படைத் தளம் ஆகியவையும் இந்தத் தொகுதிக்குள்தான் வருகின்றன.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில், கிராமப்புறப் பகுதிகளே அதிகம். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார், முக்குலத்தோர், யாதவர், பட்டியலினத்தவர், வேளாளர் , இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து வாழும் இந்தத் தொகுதியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம்
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம். ராதாபுரம் அருகிலுள்ள ஆவரைகுளம்தான் ஞானதிரவியத்தின் சொந்த ஊர். அன்னை குழும நிறுவனங்களின் நிறுவனரான இவருக்கு தென்காசி, பழவூர், பணகுடி பகுதிகளில் சொந்தமாக காற்றாலைகள் இருக்கின்றன. அவை போக, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிசினஸ்களிலும் ஈடுபட்டுவருகிறார்.
பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே ஆட்சியரை, அவர் மிரட்டிய காட்சி தமிழ்நாட்டையே அதிரவைத்தது. நெல்லை திருமண்டலத்தில், பேராயர் பர்னபாஸுக்கும், 'லே’ செயலாளர் ஜெயசிங்குக்கும் இடையேயான பனிப்போரில், ஜெயசிங் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் ஞானதிரவியம். தனது எம்.பி பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கீழ் வரும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் உயர்கல்வி நிலைக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பு
களிலிருந்து ஞானதிரவியம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் திருமண்டல அலுவலகத்துக்குச் சென்று பேராயரின் ஆதரவாளர்களைத் தாக்கியதாக எம்.பி ஞானதிரவியம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 33 பேர்மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. ஞானதிரவியத்தின் அடாவடி அரசியல், சர்ச்சைப் பேச்சால் சொந்தக் கட்சியினரே அவருக்கு மீண்டும் சீட் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டை போடுகிறார்கள். கட்சி தலைமையும் ஞானதிரவியத்திற்கு சீட் கிடையாது என்று கறாராக சொல்லிவிட்டார்களாம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல்
வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான ம.கிரகாம்பெல். வள்ளியூர் அருகிலுள்ள வடக்கன்குளம் தான் ம.கிரகாம்பெல் சொந்த ஊர்.1987 தி.மு.கவில் கிளை செயலாளராக தனது கட்சி பணியைத் துவங்கி, ஒன்றிய பிரதிநிதி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர், தற்போது வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்தவர் வகித்து வருகிறார். கிரகாம்பெல் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்,இவரின் தாயார் கிறிஸ்துவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவருக்கு ஆதரவு அளிப்பார்கள். கிரகாம்பெல் 2006 முதல் 2011 வரை நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்தார். இவரின் மனைவி புவனேஸ்வரி 1996 முதல் - 2001 வரை வள்ளியூர் ஒன்றிய துணை சேர்மன் மற்றும் 2001 -2006 வரை மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தார். கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போது திமுக நடத்திய 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் அமபாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 4 கோடிக்கு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சமையல் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவர் பெயர் தான் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஐ-பேக் டீம் வேட்பாளராக பரிந்துரை செய்ததாகவும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த தேர்தலில் அப்பாவு சூழ்ச்சி செய்து தோற்கடிக்கப்பட்டார், அதனால் கருணை அடிப்படையில் அப்பாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். வருகின்ற மக்களவை தேர்தலுக்கு கிரகாம்பெல் பெயர் தான் அடிபடுவதாக திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இவரை தான் பரிந்துரைப்பதாக திருநெல்வேலி திமுக நிர்வாகிகள் பேசுகின்றனர். மேலும், உட்கட்சி பூசலில் சிக்காதவர், எந்த குற்றப் பின்ணணியும் இல்லாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுவின் மகனும், மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான அலெக்ஸ் அப்பாவு மக்களவை தேர்தலில் போட்டியிடத் தீவிரமாக இருக்கிறார். தமிழக வூஷூ அசோசியேஷன் மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராதாபுரம் தான் அலெக்ஸ் அப்பாவுக்கு சொந்த ஊர். இவர் சொந்த தொழில் செய்து வருகிறார். அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி மக்களைவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்,ஆனால் அப்பாவு சபாநாயகராக இருப்பதால் சீட் கிடைப்பது கடினம் என்று திமுக வட்டார உறுப்பினர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், சபாநாயகர் அப்பாவு, தி.மு.க அரசு கிறிஸ்தவர்களுக்கு முதன்மையானது என குறிப்பிட்டது, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் கருத்துகளின் விளைவுகள் மக்களவை தேர்தலில் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சபாநாயகர் அப்பாவுக்கும், முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பனுக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த விஷயம். அரசியலில் ஆர்வம் காட்டிவரும் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் கட்சிப் பதவிக்கு முயன்றபோது, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் முட்டுக்கட்டை போட்டுவந்தாராம். இதனால் நேரடியாக கட்சித் தலைமையைச் சந்தித்த அப்பாவு, தன்னுடைய மகன் அலெக்ஸுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொறுப்பு வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின், திருநெல்வேலி மக்களவை தேர்தலில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இவரின் மனைவி சௌமிய எட்வின் நாங்குநேரி யூனியன் சேர்மனாக இருக்கிறார். ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுவருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தது.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒடுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியை தவிர, மற்ற தொகுதியில் அறியப்படத்தார். முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பனுக்கும் எதிராக திமுக தலைமையிடம் புகார் கொடுத்தார் என்று குறிப்பிடத்தக்கது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான ஆரோக்கிய எட்வின். கனிமொழியின் மூலம் திருநெல்வேலி மக்களவை தேர்தலில் சீட் கிடைக்க முயற்சி செய்கிறார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் யாருக்கு திமுக தலைமை சீட் கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications