ஜிபிஎஸ் (GBS) நோயால் 9 வயது சிறுவன் பலி! திருவள்ளூரில் அதிர்ச்சி! நோய்க்கான அறிகுறிகள் என்ன?
திருவள்ளூர்: திருவள்ளூரில் கிலா பா சின்ட்ரோம் என்ற ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன். இவருக்கு 9 வயதாகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கிலன் பா சின்ட்ரோம் எனும் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
ஜிபிஎஸ் நோய் என்றால் என்ன: ஜிபிஎஸ் நோய் என்பது பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். தரமற்ற உணவு, மாசுபட்ட நீர், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், தடுப்பூசியால் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்பட்டு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்பட்டு கை, கால்கள் மரத்து போதல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுவதிலும் சிரமம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இந்த அறிகுறிகளுடன் ஒரு சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா போல தொற்றுநோய் பாதிப்பு இந்த நோய்க்கு இல்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடையலாம் என்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். எனினும் வேறு சில பாதிப்புகளால் ஓரிருவர் உயிரிழக்கிறார்கள். அதன்படி மைதீஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரது உடலில் ஜிபிஎஸ் நோயுடன் இதய நோயும் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications