திருத்தணியில் பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் தாயார் வீடு இடிப்பு! ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த் துறை!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் தாயார் வீடு உட்பட பல கட்டிடங்களை வருவாய்த் துறை இடித்து அப்புறப்படுத்தியது.
ரேணுகா என்ற சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள தொழுதாவூர் என்ற கிராமத்தில் வெள்ளக்குட்டை என்ற நீர் நிலையானது சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியை அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரது தாயார் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக புகார் எழுந்தது. இதேபோல் தொழுதாவூர் பஞ்சாயத்து தலைவரும், திமுக விவசாய அணியின் மாவட்ட நிர்வாகியுமான அருள் முருகன் என்பவரும் நீர் நிலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருந்தாக புகார் எழுந்தது.
நீர் நிலை ஆக்கிரமிப்பு
நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதை கண்டு மனம் பொறுக்காமல் நீதிமன்றத்தின் படியேறிய சமூக ஆர்வலர் ரேணுகா தனது சட்டப்போராட்டத்தில் வெற்றியும் கண்டுவிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை காலி செய்து கொள்ளுமாறு உரிய நபர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த னோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அரசு கட்டிடங்கள்
அதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதி காட்டியது. இதையடுத்து திருத்தணி கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையில் நிகழ்விடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மளமளவென இடித்து அப்புறப்படுத்தினர். இதில் குட்டை இடத்தில் கட்டப்பட்டிருந்த இ சேவை மையம், நியாய விலைக் கடை என அரசு கட்டிடங்களும் தப்பவில்லை.
பேசு பொருள்
இதேபோல் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் தாயார் வீடும் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிகழ்வு திருத்தணி சுற்று வட்டார மக்கள் மத்தியில் பேசு பொருளாக அமைந்துள்ளது.