திருவள்ளூர் தொகுதி: வாகை சூடுவாரா காங்கிரஸ் வேட்பாளர் மாஜி ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்?
திருவள்ளூர்: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்று திருவள்ளூர் லோக்சபா தொகுதி. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் மேலிடத்துக்கு மிக நெருக்கமானவருமான சசிகாந்த் செந்தில் களம் காணும் இத்தொகுதியின் நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
திருவள்ளூர் தொகுதி அறிமுகம்: சென்னைக்கு அருகே ஆந்திராவின் எல்லையில் உள்ள தொகுதி. விவசாயமும் தொழிற்சாலைகளும் நிறைந்த இடம். கூவம், ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் பாயும் தொகுதி. திருவள்ளூர் லோக்சபா தொகுதிதான் கூவம் ஆற்றின் பிறப்பிடம். 2009-ம் ஆண்டு வரை ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றிருந்தது. 2009-ம் ஆண்டு முதல் திருவள்ளூர் தனித் தொகுதியாக இருந்து வருகிறது. வன்னியர்கள், நாடார்கள், தலித்துகள், முதலியார் கணிசமாக உள்ளனர். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாக்காளர்களாக உள்ளனர்.

திருவள்ளூர் லோக்சபா தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,58,098; ஆண் வாக்காளர்கள்: 10,10,968; பெண் வாக்காளர்கள்: 10,46,755; 3-ம் பாலினத்தவர்- 375.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: கும்மிடிபூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம்.
ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ்தான் தொடர்ந்து வென்று வந்தது. திருவள்ளூர் லோக்சபா தொகுதியாக உருவான பின்னர் 2009, 2014-ல் அதிமுக வென்றது. 2019-ல் காங்கிரஸ் வென்றது.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
வேணுகோபால் (அதிமுக) 3,68,294
காயத்திரி (திமுக) 3,36,621
சுரேஷ்(தேமுதிக) 1,10,452
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
வேணுகோபால்( அதிமுக) 6,28,499
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) 3,05,069
யுவராஜ்(தேமுதிக) 2,04,734
ஜெயக்குமார் (காங்கிரசு) 43,960
2019-ம் ஆண்டு திருவள்ளூர் லோக்சபா தொகுதி முடிவுகள்
ஜெயக்குமார் காங்கிரஸ் - 7,67,292
வேணுகோபால் அதிமுக- 4,10,337
எம். லோகரெங்கன் மநீம- 73,731
வெற்றிச்செல்வி நாம் தமிழர்- 65,416
பொன்.ராஜா அமமுக- 33,944
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
சசிகாந்த் செந்தில் - காங்கிரஸ்
நல்லதம்பி - தேமுதிக
பொன். வி. பாலகணபதி- பாஜக
ஜெகதீஷ் சந்தர்- நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 14 பேர் களத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதி பிரச்சனைகள்: வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, பட்டாபிராம் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர் பாதாள சாக்கடை பணிகளும் முடிவடையவில்லை. திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படாத காரணத்தால் சென்னைக்கு பணிக்கு வரும் திருவள்ளூர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இத்துயரத்தை போக்க வேண்டும் என்பதும் கோரிக்கை. குறிப்பாக நள்ளிரவு ரயில் சேவைகள் திருவள்ளூருக்கு தொடர்ந்து தேவை என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
https://tamil.oneindia.com/thiruvallur-lok-sabha-election-result-359/
தற்போதைய தொகுதி நிலவரம்: திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் திமுக ஒரு முறை கூட வென்றது இல்லைதான். ஆனால் 2021-ல் திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வென்றது. இது காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மிகப் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு ராஜினாமா செய்தவர். காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் இத்தொகுதியில் சசிகாந்த் செந்தில் வெற்றியை டெல்லி தலைவர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளர் நல்லதம்பிக்கு கிடைக்கலாம். மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்குகள் பாஜகவின் பொன் பால கணபதிக்கு செல்லக் கூடும். உள்ளூர் பிரச்சனைகளுக்குப் போராடுவதால் இளைய தலைமுறையினர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications