அமைச்சர் உத்தரவிட்ட பணியை நிறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர்..போனில் மிரட்டல்- கட்சிக்குள் சலசலப்பு!
திருவள்ளூர்: அமைச்சர் காந்தி உத்தரவிட்டிருந்த பணிக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஏரி உபரி நீரை திருவள்ளூர் மாவட்டம் வீரமங்கலம் ஏரிக்கு கொண்டு வருவதற்காக கால்வாயை தூர்வார அமைச்சர் தன்னைக் கேட்காமல் உத்தரவிட்டதால் மாவட்ட பொறுப்பாளர் பூபதி அதிருப்தி அடைந்துள்ளார்.
உஷார்.. தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்கு
இதையடுத்து அமைச்சர் போனில் பேசி மிரட்டிய நிலையில், தூர்வாரும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை ஏரி
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருப்பவர் ஆர்.காந்தி. இவர் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை பொன்னை ஏரி நிரம்பியதும், தண்ணீர் ஆந்திராவிற்குச் செல்கிறது. அதை செட்டிவாரிப்பள்ளி வழியாக கால்வாய் அமைத்து திருவள்ளூர் மாவட்டம் வீரமங்கலம ஏரிக்கு கொண்டு செல்ல அமைச்சர் ஆர்.காந்தி திட்டமிட்டுள்ளார்.
அமைச்சர் காந்தி உத்தரவு
இதற்காக, நீர்வளத்துறை அமைச்சரிடம் சொல்லிவிட்டு, துறை அதிகாரிகளிடம், கால்வாயை தூர்வார உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் சொன்னதும் அதிகாரிகளும் விரைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் திருவள்ளூர் தி.மு.க மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் பூபதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னிடமே சொல்லாமல் என் மாவட்டத்தில் எப்படி தூர்வாரலாம் என அதிகாரிகளிடம் கோபப்பட்டுள்ளார்.
கொதித்த அமைச்சர்
தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் எகிறியதால் பயந்துபோன செயற்பொறியாளர் இதுகுறித்து அமைச்சர் காந்தியிடம் தெரிவித்துள்ளார். உடனே, மாவட்ட பொறுப்பாளருக்கு போன் செய்த அமைச்ச காந்தி, "என் தொகுதியில இருந்து தண்ணீரை திறக்க நான் உத்தரவிட்டிருக்கேன். நீ எப்படி அதிகாரிகளை மிரட்டலாம். மேலிடத்தில் சொல்லி பதவியை விட்டே தூக்கிடுவேன்" என கொதித்துள்ளார்.
மீண்டும் பணிகள்
அமைச்சர் டென்ஷனாகி கத்தியதால் பயந்துபோன மாவட்ட பொறுப்பாளர், ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம். யார் பண்றதுனு தெரியாமத்தான் அதிகாரிகள்கிட்ட கேட்டேன் எனப் பம்மியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் தூர்வாரும் பணிகளில் ஜரூராக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் விட்டு மாவட்டம் தி.மு.கவில் மோதல் ஏற்பட்டதால் திருவள்ளூர் தி.மு.கவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.