திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நடிகை ரோஜா தரிசனம்... நடிகர் யோகி பாபுவும் வழிபாடு!
திருவள்ளூர் : ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், நடிகர் யோகிபாபுவும் முருகப் பெருமானை வழிபட்டார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்து முருக பக்தர்கள் ஏராளமானோர் நாள்தோறும் வருகை தருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி , மலர் காவடி, மயில் காவடிகளுடனும், அலகு குத்தியும் அரோகரா என்று பக்தி பரவசத்துடன் மலைக்கோவிலில் முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தனி முருகப் பெருமானை தரிசிக்க, ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, காவடி எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து முருகபெருமானுக்கு காவடி எடுத்து, உண்டியல் காணிக்கை செலுத்தி அவர் சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நடிகை ரோஜா, தன்னை வளர்த்தேடுத்த தமிழக மக்களுக்கு, ஆடிக்கிருத்திகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்ட நடிகை ரோஜா உடன், அங்கிருந்த பக்தர்கள் ஆர்வமுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல், திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் யோகிபாபுவும் சுவாமி தரிசனம் செய்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு முக்கிய பிரமுகர்கள் சினிமா துறை நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று திரைப்பட நடிகர் யோகிபாபு திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கூச்சலிட, ரசிகர்களுக்கு கையை மேல் தூக்கி அசைத்தபடியே சென்றார்.
அதைத்தொடர்ந்து திருக்கோயிலுக்குள் சென்று உற்சவர் முருகப்பெருமான் மற்றும் மூலவர் முருகப்பெருமானை தரிசித்து சென்றார். முன்னதாக, கோவிலுக்குள் வரும்போது ரசிகர்கள் அவரது முன்னால் நின்று செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications