நீங்க வேற! யார் போடுவா? இளையராஜாவுக்கு யுவன் சங்கர் கூட ஓட்டு போட மாட்டாரே.. சீமான் கடும் விமர்சனம்
திருவள்ளூர்: இளையராஜா பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு யாரும் ஓட்டு போடமாட்டார்கள். ஏன் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஓட்டு போட மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
அண்மையில் அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தில் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அம்பேத்கர் கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும் அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியின் செயல்பாடுகளை பாராட்டியிருந்திருப்பார் என்றும் எழுதியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. குடியரசுத் தலைவர் பதவி அல்லது எம்பி பதவிக்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் இவற்றை இளையராஜா மறுத்தார்.

மோடியை பிடிக்கும்
தனக்கு மோடியை பிடிக்கும், தான் எந்த கட்சியையும் சேராதவன், தான் இதுவரை மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டதில்லை என்றும் இளையராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் குடியரசுத் தலைவரால் நியமன எம்பியாக இளையராஜா அறிவிக்கப்பட்டார். இது தற்போது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் இளையராஜா பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கூட ஓட்டு போட்ட மாட்டார்.

பட்டியலினத்தவர்
பட்டியலினத்தவர் பழங்குடியினரை குடியரசு தலைவராக்கியவர்கள் அவர்களை பிரதமராக்க முடியுமா. செயல் அரசியலோ சேவை அரசியலோ திமுக அரசில் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே. சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என கூறும் திமுக, சொன்னதை செய்ய மாட்டார்கள். ஆனால் சொல்லாததை செய்வார்கள்.
Recommended Video

இஸ்லாமியர்களின் மசூதி
எங்களுக்கு காங்கிரஸ் கட்சி இன பகைவன், பாஜக மனித குல பகைவன், இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை உருவாக்கினால் நாங்கள் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்திய விடுதலைக்கு ஆர் எஸ் எஸ் போராடினார்களா, இஸ்லாமியர்களின் மசூதி இருக்கும் இடங்களில் எல்லாம் இவர்களின் கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள். சாதி, மத கடவுளை நினைப்பவர்களுக்கு மக்களை பற்றி சிந்திக்க நேரமிருக்காது என சீமான் பேசியிருந்தார். இளையராஜா பிரதமர் மோடியை பாராட்டி புத்தக முன்னுரை எழுதியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டரில் கருப்பு உடை அணிந்து கொண்டு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை யுவன் கருப்பு தமிழன் என்றால் நான் அண்டங்காக்கை கருப்பு என தெரிவித்திருந்தார். அப்போது சீமான் எருமை மாடு கூட தான் கருப்பா இருக்கு, அப்போ அது திராவிடமா என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications