எகிப்து நாட்டில் தமிழில் கல்வெட்டு! 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு! அமர்நாத் பூரிப்பு
திருவள்ளூர்: எகிப்து நாட்டில் தமிழில் கல்வெட்டு இருந்தது என்பது சிறந்த செய்தியாக கருதுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் எகிப்துடன் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு இருந்தது கல்வெட்டு வாயிலாக தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்த முடியாது. கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடும் என நம்புகிறேன். அப்படி வெளியிட்டால் அந்த ஆய்வறிக்கைகள் ஆய்வுலகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கருத்துகளில் திருத்தம் செய்ய முடியாது. திருவள்ளூர் மாவட்டம் அதிராம்பாக்கம், குடியம், பட்டறைபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும்.
அப்போது பல தகவல்கள் கிடைக்கும். அதைவைத்து கட்டமைக்கலாம். எகிப்து நாட்டில் தமிழில் கல்வெட்டு இருந்தது என்பது சிறந்த செய்தியாக கருதுகிறேன். எகிப்துடன் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பில் இருந்ததை கல்வெட்டு உறுதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரிய தளமான 'கிங்ஸ் பள்ளத்தாக்கில்' (Valley of the Kings) 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதத்திலும் உள்ளன. கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட இந்தக் கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகர் உள்ளிட்டோரின் பண்டைய வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடத்தக்கது, 'சிகை கொற்றன்' என்ற தமிழரின் பெயர் 5 வெவ்வேறு பிரமிடுகளில், 8 இடங்களில் பதியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் "சிகை கொற்றன் - வர கண்ட" (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. ரோமானியக் காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல்வழி மட்டுமல்லாமல், எகிப்தின் உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்து பண்டைய தலைநகரான தீப்ஸில் மசாலாப் பொருட்களுக்காக வர்த்தகம் செய்ததற்கான முதல் நேரடி ஆதாரமாக இது கருதப்படுகிறது.
"தமிழினம் கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம் என்பதனை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது" என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தக் கண்டுபிடிப்பு குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். வரலாற்றாசிரியர்கள் இதை இந்தியப் பெருங்கடல் கடல் வணிக வரலாற்றை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் முக்கியமான திருப்புமுனையாக மதிப்பிடுகின்றனர். மேலும் விரிவான ஆய்வுகள் பண்டைய தமிழர்களின் உலகளாவிய தடம் பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை, தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் (Prof. Ingo Strach) மற்றும் பிரான்சின் பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் (Prof. Charlotte Schmidt) ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பைத்தான் அமர்நாத் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications