அத்துமீறல்..அராஜகம்! போலீஸ் கண்முன் தீக்கிரையாகி துடித்து அடங்கிய உயிர்! கதறும் கும்மிடிப்பூண்டி!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போது, பட்டா இடத்தில் தனது வீடு இருப்பதாக கூறி இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்த வீடியோ வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கும்முடிபூண்டி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் கோட்டைக்கரைப் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.
இதனை தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாகவும் மின்கட்டணம் உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் வீட்டை இடிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மணமுடைந்த ராஜ்குமார் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். மளமளவென தீ பரவியதில் உடல் முழுவதும் பட்சி நிலையில் வழி தாங்காமல் அவர் அங்கும் இங்கும் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீக்காயத்துடன் அவர் அங்கும் இங்கும் ஓடிய போது காவல்துறையினர் அதிர்ச்சியில் தலை தெறிக்க ஓடினர். மேலும் அதிகாரிகளும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
இதை அடுத்து அருகில் இருந்தோர் காயமடைந்த ராஜ்குமாரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 85 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் தமிழக முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பின் போது மிகவும் கவன குறைவாகவும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எலவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்யா சர்மா, ஆகியோரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பணியிட மாற்றம் செய்தார்,
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். மேலும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் கும்முடிபூண்டி பகுதியை சோகத்தில் மூழ்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications