கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள்.. திருவள்ளூர் கலெக்டர் செய்த தரமான சம்பவம்.. சபாஷ்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவிலில் பட்டியலின மக்களை வழிபட மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விடவில்லை. இந்த பிரச்சனையில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபட வைத்துள்ளார்.
பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. ஆனாலும் கூட சாதி அடிப்படையில் மக்களை உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் தற்போதும் ஆங்காங்கே இருந்து வருகிறது. இன்னும் கூட சில இடங்களில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலை உள்ளது.

இதுபோன்ற ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த நிலையில கலெக்டர் பிரபு சங்கர் அவர்களை கோவிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அதாவது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து வழுதலம்பேடு எனும் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ எட்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 22 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள இருபிரிவு மக்களுக்கு இடையேயான பிரச்சனையாகும். அதாவது கிராமத்தில் பட்டியலின மக்களும், இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் உள்ளனர். இந்நிலையில் தான் கோவில் தொடர்பாக இருதரப்பு மக்களுக்கும் கோவில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த பிரச்சனையின் காரணமாக கோவில் கடந்த 22 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. சமீபத்தில் எட்டியம்மன் கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பு மக்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கோவிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. திமுக ஊராட்சி தலைவி மீது வன்கொடுமை வழக்கு
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது எதிர்தரப்பினர் தங்களின் பட்டா நிலம் வழியாக கோவிலுக்கு செல்லக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டனர். இது பிரச்சனையானது. எஸ்பி சீனிவாச பெருமாள், பொன்னேரி கோட்டாட்ச்சியர் வாகே சங்கேத் பல்வந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் பிரச்சனை தொடர்பாக பொன்னேரி போலீசார் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மீண்டும் கோவிலுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சார்பில் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் பிரபு சங்கர் முன்னிலையில் பட்டியலின மக்கள் இன்று எட்டியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இவர்களை கலெக்டர் பிரபு சங்கர் கோவிலுக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications