கோவிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. திமுக ஊராட்சி தலைவி மீது வன்கொடுமை வழக்கு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களை மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக எஸ்பி, கோட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாத நிலையில் கோவிலுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பட்டியலின மக்களின் புகாரில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவி உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து வழுதலம் பேடு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ எட்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 22 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் அந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கும், இன்னொரு பிரிவை சேர்ந்த மக்களுக்கும் இடையே பிரச்சனை இருப்பது தான் காரணமாக இருந்தது.
இந்நிலையில் தான் சமீபத்தில் எட்டியம்மன் கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவின்போது இருசமுதாய மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்தரப்பு சம்மதம் தெரிவித்தது.
அதன்பிறகு சமாதான கூட்டத்தில் பேசியபடி பட்டியலின மக்களை கோவிலுக்கு எதிர்தரப்பு அனுமதிக்கவில்லை. மேலும் கோவிலுக்கு தரிசனம் செய்ய தங்களின் பட்டா நிலம் வழியாக செல்லக்கூடாது என ஒரு தரப்பு தடுத்து நிறுத்தியது. இதுபற்றி அறிந்த போலீசார் மாற்றுப்பாதையில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போதும் எதிர் தரப்பும் தடுத்தது.

இதனால் நிலைமை மோசமானது. பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக எஸ்பி சீனிவாச பெருமாள், பொன்னேரி கோட்டாச்சியர் வாகே சங்கேத் பல்வந்த் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்தரப்பு மறுத்துவிட்டது.

இதையடுத்து வருவாய் துறையினர் கோவிலுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். மேலும் பட்டியலின மக்கள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications