தீவிரவாதிகளுடன் தொடர்பு.. திருவள்ளூரில் இளைஞரை வளைத்து பிடித்த என்ஐஏ.. தீவிர விசாரணை
திருவள்ளூர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி திருவள்ளூரில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் அண்மைக்காலமாக இந்தியாவில் தனது கொள்கைகளையும், கருத்துகளையும் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவிரவாத அமைப்புகளால் எளிதாக ஈடுபட முடிகிறது. ஒருகாலத்தில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தற்போது தென் மாநிலங்கள் மீதும் தனது கவனத்தை திருப்பி இருக்கின்றன. இதில் கேரளாவில் உள்ள இளைஞர்கள் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விரித்த வலையில் அதிக அளவில் சிக்கியிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஏராளமான கேரள இளைஞர்களை போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் கைது செய்துள்ளன.

அந்த வகையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறி சென்னையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ராஜா முகமது (34). இவர் கடந்த ஓராண்டாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனாரின் வீட்டில் தங்கியுள்ளார். இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளுடன் திருவள்ளூரில் இருந்து ஒருவர் பேசி வருவதாக சென்னை குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரகசிய விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு பிரிவினர், நேற்று காலை அதிரடியாக ராஜா முகமதுவை கைது செய்தனர். சவூதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் ராஜா முகமது சிக்னல் என்ற செயலியின் மூலம் பேசி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, என்ஐஏ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளும் ராஜா முகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சவூதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர், ராஜ முகமதுவை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. எந்த தீவிரவாத அமைப்புடன் ராஜா முகமது தொடர்பு வைத்திருந்தார்; இந்தியாவில் தாக்குதல் நடத்துவது குறித்து அவர்கள் ஏதேனும் சதித்திட்டம் தீட்டினார்களா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications