வரதட்சிணை கொடுமை! திருமணமான 4ஆவது நாளில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அலறிய பொன்னேரி
திருவள்ளூர்: திருவள்ளூரில் திருமணமான நான்காவது நாளில் புதுமணப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வரதட்சிணைக் கொடுமைகள் அதிகரித்து வருவதும், இதனால் பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்தவர் பன்னீர். இவருக்குக் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சிணையாக 5 சவரன் நகைகள் கொடுப்பதாகப் பெண் வீட்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அவர்களால் 4 சவரன் மட்டுமே நகை கொடுக்க முடிந்ததாம். இதனால் மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு புதுப்பெண்ணுக்கு வரதட்சிணைக் கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத அந்தப் பெண், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொன்னேரி போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்மைக் காலமாக வரதட்சிணைக் கொடுமைகள் அதிகரிப்பதும், அதனால் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
திருப்பூர்: 2.5 கோடி செலவில் திருமணம் - 10ஆவது நாளில் புதுப்பெண் தற்கொலை
திருப்பூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது வரதட்சிணையாக 500 பவுன் போடுவதாகப் பேசப்பட்டு 300 பவுன் நகை போட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், 70 லட்சம் மதிப்பிலான வால்வோ காரும் மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்டது.
அதாவது, திருமணத்தை ஊரே மெச்சும் அளவுக்கு ரூ. 2.5 கோடி செலவில் அண்ணாதுரை இந்தத் திருமணத்தை நடத்தினாராம். ஆனால், திருமணமான பத்தாவது நாளிலேயே மீதமுள்ள 200 பவுன் நகையை வாங்கி வா எனக் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவைத் துன்புறுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரிதன்யாவை உடல் ரீதியாகவும் கவின்குமார் டார்ச்சர் செய்தாராம். இதுகுறித்து தாய் தந்தையரிடம் சொன்னபோதும், பஞ்சாயத்து பேசி மகளை மீண்டும் புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனாலும், அந்த மூவரின் பேராசை அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் ரிதன்யாவைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தனராம். இதனால் நாளுக்கு நாள் கொடுமையைத் தாங்க முடியாமல் நேற்று முன்தினம் ரிதன்யா காரில் பூச்சி மருந்துகளைக் குடித்துவிட்டுச் சடலமாகக் கிடந்தார். தனது சாவுக்கு யார் காரணம் என்பது குறித்து ரிதன்யா வாய்ஸ் நோட்டில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ரா தேவி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மகளின் சடலத்தைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.












Click it and Unblock the Notifications