சிறுவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த தனியார் காப்பக வார்டன் போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே தனியார் காப்பக விடுதியில் தங்கியிருந்த சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்த தலைமை வார்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர்: தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறுவர்களை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமை வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் புகாரில் கைதான நபரின் பெயர் கிருஷ்ணசாமி என்பதாகும். வில்லிபுத்தூர் முள்ளிக்குளம் மல்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் அருகில் உள்ள கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தனியார் அறக்கட்டளையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் தலைமை வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 6 ஆண்டுகளாக வார்டனாக பணிபுரிந்து வரும் கிருஷ்ணசாமிக்கு 46 வயதாகிறது. தனக்கு உதவியாக விவேகானந்தா ஆதரவற்றோர் காப்பக விடுதிக்கு வார்டனாக வெங்கட்ராமன் என்பவரை புதிதாக பணியில் சேர்ந்தார். இதனையடுத்து கிருஷ்ணசாமி செய்த தவறுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தது.

கிருஷ்ணசாமி மீது புகார்
வெங்கட்ராமனை சந்தித்த மாணவர்கள், தலைமை வார்டன் கிருஷ்ணசாமி தங்களை அடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினர். இந்த தகவலை அறக்கட்டளையின் தலைமைக்கு வெங்கட்ராமன் தெரியப்படுத்தினார்.

கிருஷ்ணசாமி சஸ்பெண்ட்
புகாரின் பேரில் சேவாலயா அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டார். சுவாமி விவேகானந்தர் மாணவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை செய்தபோது தலைமை வார்டன் கிருஷ்ணசாமி அங்கு தங்கியிருந்த மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கிருஷ்ணசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிருஷ்ணசாமி அந்த வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கொடுமைப்படுத்திய கிருஷ்ணசாமி
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா தனியார் அறக்கட்டளை கடந்த 33 வருடங்களாக இயங்கி வருகிறது. அங்கு மகாகவி பாரதியார் பள்ளி சேவாலயா சமுதாயக் கல்லூரி சுவாமி விவேகானந்தர் மாணவர் இல்லம், அன்னை தெரசா மாணவியர் இல்லம், மகாத்மா காந்தி மருத்துவ மையம், வினோபாஜி கோசாலை மையம் இயங்கி வருகின்றன. தனியார் காப்பகத்தில் தற்போது 65 ஆதரவற்ற மாணவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் ஆணையை பெற்று பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் கல்விக்காகவும் தங்கியுள்ளனர். ஆதரவற்ற சிறுவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார் தலைமை வார்டன் கிருஷ்ணசாமி.

7 மாணவர்கள் புகார்
கிருஷ்ணசாமி மீது மாணவர்கள் அளித்த புகார் குறித்து டாக்டர் கோகுலகிருஷ்ணன் கசுவா சேவாலய தலைவர் ஆனந்தன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கரபாண்டியன் ஆகிய மூவர் அடங்கிய குழு அமைத்து விசாரணை செய்தனர். தலைமை வார்டன் கிருஷ்ணசாமி தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக 14 முதல் 17 வயதிற்குட்பட்ட சுமார் 7 மாணவர்கள் எழுத்து மூலம் புகார் அளித்தனர்.

எஸ்.பி விசாரணை
இதனையடுத்து சேவாலயாவின் துணைத்தலைவர் கிங்ஸ்டன் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஊத்துக்கோட்டை மகளிர் காவல் போலீசார் போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தனியார் காப்பகத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி மீனாட்சி, பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி உள்ளிட்ட காவல்துறையினர் மாணவர் இல்லத்திற்குச் சென்று நேரடியாக தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரணை செய்ததில் பல உண்மைகள் தெரியவந்தது.

கிருஷ்ணசாமி கைது
தலைமை வார்டன் கிருஷ்ணசாமி, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கன்னத்தில் கிள்ளுவது, உதட்டில் முத்தம் கொடுப்பது என தொந்தரவு செய்துள்ளார். இரவு நேரங்களில் தனது அறைக்கு கால்களை பிடித்து விடும்படி கட்டாயப்படுத்துவாராம் கிருஷ்ணசாமி. அறைக்கு வரும் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அவரது ஆசைக்கு உடன்படாத மாணவர்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை வார்டன் கிருஷ்ணசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

போக்சோ சட்டம்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் கிளைச்சிறையில் கிருஷ்ணசாமி அடைக்கப்பட்டுள்ளார். சிறுவர்களிடம் தவறாக நடந்துகொண்ட கிருஷ்ணசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications