திடீர் பரபரப்பு.. தவெக கட்டிடம் இடிப்பு.. திருவள்ளூரில் விஜய் கட்சி ஆபீஸை இடித்து தள்ளிய அதிகாரிகள்
திருவள்ளூர்: நடிகர் விஜய்யின் தவெக சார்பில் திருவள்ளூரில் கட்டப்பட்டு இருந்த இளைஞரணி அலுவலக கட்டிடத்தை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர். சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தவெக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி, அதிகாரிகள் இடித்தனர். இதனால் அங்குச் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நமது நாட்டில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணமாக இருக்கிறது. பொது இடங்களில் ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டிடங்களால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஆக்கிரமிப்பு இடிப்பு
அதன்படி திருவள்ளூர் நகரப் பகுதியில் கடந்த சில காலமாகவே டிராபிக் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சிக்கலைச் சரி செய்வதற்காகச் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாகவே நடந்து வருகிறது. அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி வாகனங்களுடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இன்றைய தினம் மட்டும் 17க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டன.
அதன்படி தவெக திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட மாவட்ட அலுவலகம் இடிக்கப்பட்டது. திருவள்ளூர் பத்தியால்பேட்டை என்ற இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததால் கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறை இடித்து அகற்றியது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைமை அலுவலகம் இருந்த நிலையி், அதை தான் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
தவெக அலுவலகம் இடிப்பு
இந்த தவெக அலுவலகம் ஆக்கிரமிப்பு என்று முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்தே இன்று அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. கட்டிடம் அகற்றப்பட்ட போது அங்கு தவெகவினர் கூடியதால் கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக அடுத்த கட்ட ஆலோசனை
தவெகவை பொறுத்தவரைச் சமீபத்தில் தான் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக தவெக பொது குழு கூட்டத்தை நடத்த அக்கட்சித் தலைமை திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இது நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், சமீபத்தில் தான் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல் கூட்டணி
தவெகவை பொறுத்தவரை 2026 சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு என்று கூறி பயணித்து வருகிறது. மேலும், விஜய்யை தலைமை ஏற்கும் கட்சி உடனேயே கூட்டணி அமைக்கப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இந்தச் சூழலில் தவெக உடன் முதல் கட்சியாகத் தமிழக முஸ்லிம் லீக் கூட்டணியில் இணைந்துள்ளது.. திமுக தொடர்ந்து இஸ்லாமியர்களை ஏமாற்றி வருவதாகவும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு விஜய் கட்சியில் பதவி கொடுத்திருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதாகத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ரம்ஜான் மாதத்தில் நோன்பு விருந்தில் அவர் பங்கேற்ற வேண்டும் என்பதற்காகவே அவரை நேரில் சந்திக்கச் சென்றோம். அவரும் நிச்சயம் பங்கேற்பேன் எனச் சொல்லியுள்ளார்.. மேலும், அவர் கட்சியின் முதல் மாநாட்டிலேயே கொள்கை ரீதியாக பாஜக எதிரி எனக் கூறியது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications