கணினி பட்டா வேணும்னா.. இந்த பேப்பர் வேணும்! திருத்தணி விஏஓ கோடீஸ்வரிக்கு வந்த ஆசை! இப்படி ஆகிடுச்சே
திருவள்ளூர்: திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் கணினி பட்டா வழங்குவதற்கு முக்கியமான ஒரு பேப்பர் வேண்டும் அதாவது லஞ்சம் வேண்டும் என்று சொல்லி அந்த பணத்தை பெற்ற விஏஓ கோடீஸ்வரியை போலீசார் கைது செய்துள்ளனர். 25 பேரிடம் தலா ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்டு பணத்தை பெற்றுக்கொண்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோடீஸ்வரி (வயது 47). கணினி வழி பட்டா வழங்க அந்த கிராமத்தை சேர்ந்த 25 பேரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகநல்லூர் ஊராட்சியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் 100 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டு, 100 குடும்பத்தினர் குடியமர்த்தப்பட்டனர். அந்த வீடுகளில் குடியிருப்புவாசிகள் வசித்து வந்துள்ளனர். ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை பட்டாவை வருவாய்த் துறை அதிகாரிகள் அதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் இருந்துள்ளனர்.
வீட்டு மனை பட்டா இல்லாததன் காரணமாக அங்கு குடியிருக்கும் 100 குடும்பத்தினர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் அணுகினர். அப்போது கணினி வழி பட்டா வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வீரகநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கணினி பட்டா வழங்கும் பணியில் திருத்தணி வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கிராம நிர்வாக அலுவலக் கோடீஸ்வரி, ஒரு நபருக்கு 3 ஆயிரம் வீதம் 25 பேரிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மதுசூதனன் என்பவர் இது பற்றி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற அதிகாரிகள் கோடீஸ்வரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
இதன்படி, மதுசூதனனிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் கிராம மக்கள் 25 பேரும் கொடுத்ததாக ரூ.75 ஆயிரத்தை மதுசூதனன் கோடீஸ்வரியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications