பதற வைக்கும் ‘மர்ம’ காய்ச்சல் பரவல்.. திருவள்ளூர் அருகே இளைஞர் பலி.. பொதுமக்கள் அச்சம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள தன்ராஜ் கண்டிகை கிராமத்தில், மர்ம காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

சளி, இருமல், காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் ஒரு வாரம் கடந்து நீடிப்பதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (எ) பூபாலன். இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக பூபாலன் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நேற்று காலையில் பூபாலனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு ஏற்பட்டது. உடனே அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே திருத்தணி பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மர்ம காய்ச்சலுக்கு இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications