திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. இரவு நேர பணியில் ஈடுபடாத காவலர்கள்.. பாய்ந்த நடவடிக்கை!
ஏடிஎம் கொள்ளை தொடர்பாக 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள 4 ஏடிஎம்களில் நடத்தப்பட்ட ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில், இரவு நேர பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளை போனது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அதிர்ச்சி
இந்த விசாரணையின் போது பிப்.3ம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்-ல் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுதும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதும் காவல்துறை கண்டுபிடித்தது.

ஹரியானா கொள்ளையர்கள்?
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏடிஎம் கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஜி கண்ணன் உத்தரவு
இந்த நிலையில் திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை நடந்த விவகாரம் தொடர்பாக, 6 காவல்துறையினர் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில், இரவு நேர காவல் பணியில் ஈடுபடாத திருவண்ணாமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், காவர் வரதராஜன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படைக்கு மாற்றம்
அதேபோல் போளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, காவலர்கள் சுகாதகர், அருண் ஆகியோரும், கலசப்பாக்கம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ பலராமன் உள்ளிட்ட 6 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏடிஎம் கொள்ளை விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸ் ஹரியானா விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications