'டாஸ்மாக் கடை திறக்ககூடாது'.. 2 குழந்தைகளுடன் வாசலில் அமர்ந்து பெண் போராட்டம்.. என்ன நடந்தது?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கியமானதாக இருப்பது டாஸ்மாக் கடைகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் பல கோடிகளை தாண்டி வருகிறது.
மீண்டும் மீண்டும்... விழுப்புரத்தில் லாரி மோதியதால் பெரியார் சிலை சேதம்- சாலை மறியலால் பதற்றம்!
டாஸ்மாக் கடை
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிபடைக்கும் கொரோனா தொற்று டாஸ்மாக் வருமானத்தையும் கடுமையாக பாதித்தது. பல மாதங்கள் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் அதன்பின்னர் திறக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அவ்வப்போது சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் ஒரு பெண் குடும்பத்துடன் போராட்டம்நடத்தியுள்ளார்.
கட்டிடத்தின் உரிமையாளர்
திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி. இவரது வீட்டுடன் கூடிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரான ஏழுமலைக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நேற்று காலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்துள்ளனர்.
குழந்தைகளுடன் போராட்டம்
அப்போது கட்டிடத்தின் உரிமையாளரான செல்வி, அவரது கணவர் ஏழுமலை மற்றும் குழந்தைகளுடன் கடை முன்பு அமர்ந்து டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் '' சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
என்ன நடந்தது?
அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடை ஏன் பூட்டி இருக்கிறது என்று தகராறு செய்தனர். அந்த நபர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்' என்று தெரிவித்தனர். நேற்று மாலை வரை டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. மது வாங்க வந்தவர்கள் வந்தவழியே திரும்பி சென்றனர். போலீசாரின் நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.