தமிழகத்தில் பிரளயம்... என் காலடி பட்ட இடத்தில் கொரோனா ஒழியும் - மாடர்ன் பெண் சாமியார் அருள்வாக்கு
அசுரர்களை அளிப்பதற்காக தன்னை சிவபெருமான் அனுப்பியுள்ளதாக பெண் சாமியார் ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: மூன்று மாதத்திற்குள் ஒரு பிரளயம் நடக்கும் என்று பெண் சாமியார் பவித்ரா கூறியுள்ளார். மூன்று நாட்கள் தமிழகமே அமைதியாக இருக்கும் என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார். ஈசன் உத்தரவை கேட்டு தீயசக்தியை ஒழிக்கவே திருவண்ணாமலைக்கு வந்திருப்பதாகவும் பவித்ரா கூறியுள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தஞ்சாவூரை சேர்ந்த பவித்ரா காளிமாதா மாடர்ன் உடையில் வந்து சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபவித்ரா காளிமாதா. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் வசித்து வருகிறார். ஸ்ரீ பவித்ரா காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.
கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். மற்ற சாமியார்களைப் போல இல்லாமல் இவர் மாடர்ன் உடையில் முழு மேக்கப் போட்டு கழுத்து நிறைய தங்கநகைகளை அணிந்து காட்சி அளித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பவித்ரா காளிமாதா
முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்த பவித்ரா,வெள்ளை கவுன் அணிந்து தலைமுடியிலும் கலர் அடித்திருந்தார். திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார்.
காளிமாதா வழிபாடு
கோவிலில் பலரும் அவரிடம் ஆசி கேட்டு காலில் விழுந்து வணங்கினர். பக்தர்களுக்கு குங்குமம் பூசிவிட்டு ஆசி வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய பவித்ரா, சிறுவயதில் எனக்கு காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.
திருவண்ணாமலையில் கிரிவலம்
உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன் என்றார். மக்கள் நோய் நொடியின்றி வாழவேண்டும். கொரோனா நோய் இல்லாமல், விபத்துக்கள் இல்லாமல் வாழ வேண்டும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன்.
பிரளயம் நடக்கும்
காளி ஆக்ரோஷமாக உத்தரவிட்டு அனுப்பியுள்ளார். ஒரு தீய சக்தி இருக்கிறது. அதை காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். தீய சக்தியை வதம் செய்ய வேண்டும் என்பது ஈசனின் உத்தரவு அதைக் கேட்டே வந்திருக்கிறேன் என்று கூறினார். பிரளயம் ஒன்று நடக்கும் என்றும் கூறினார்.
அசுரர்களை அழிப்பேன்
கொரோனாவால் உலக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. டெல்லியில் போய் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினேன். நான் இந்த பூமிக்கு வந்து விட்டேன் கொரோனா அழிந்து விடும் என்று கூறினேன். அதே போல டெல்லியில் கொரோனா ஒழிந்து விட்டது. நான் காலடி வைத்த இடங்களில் எல்லாம் கொரோனா ஒழிந்து விட்டது. இன்றைக்கு ஆன்மீக பயணமாக திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன். காளிமாதா அசுரர்களை அழிக்க வந்திருக்கிறேன். கெட்ட நோய்களையும் கெட்ட சக்திகளையும் ஒழித்து விடுவேன்.
ஈசன் உத்தரவு
இன்று முதல் திருவண்ணாமலையில் இனி நல்லதே நடக்கும். சிவனிடம் வரம் கேட்டால் அள்ளி கொடுத்து விடுவார். எல்லை மீறி போனால் காளியை அனுப்புவார். அதான் நான் வந்திருக்கிறேன். ஈசன் சொல்வதை நான் கேட்டு நடப்பேன். நான் சாமியார் அல்ல பில்லி சூனியம் வைக்க மாட்டேன். நள்ளிரவில் ஈசனின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று காலபைரவர் சொல்வதையும், சிவன் சொல்வதையும் அன்னை சொல்வதையும் கேட்டு அதன்படி நடப்பேன். நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை கேட்டு அந்த உத்தரவு படி நடப்பேன் என்று சொன்னார். உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்றும் பவித்ரா காளிமாதா கூறினார்.