ஓட்டு போட போன நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு?
ஓட்டு போட வந்த பெண்ணுக்கு வாக்கு சாவடியில் குழந்தை பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை: ஓட்டு போட போன நிறைமாத கர்ப்பிணி நீலாவதிக்கு பூத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது!
திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதி ரகு-நீலாவதி. இவர்கள் வேலை நிமித்தமாக கோவையில் தங்கி இருக்கிறார்கள். நீலாவதிக்கு 33 வயது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

ஆனால் ஓட்டு போட சொந்த ஊருக்குதான் வர வேண்டும் என்பதால், பெருந்துறைப்பட்டுக்கு இருவரும் கிளம்பி வந்தனர். நேற்று மதியம் நீலாவதி அங்குள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.
கர்ப்பிணி என்றால் தனியாக அவரை அனுப்ப முடியாமல், உறவினர்களும் அவருடன் சிலர் வந்திருந்தனர். அந்த சமயத்தில் திடீரென நீலாவதிக்கு பிரசவ வலி ஆரம்பமானது. வலி குறைவாகத்தான் இருந்தது. அதனால் உடனடியாக பூத்துக்குள் சென்று ஓட்டை போட்டு விட்டார். ஆனால் வெளியே வரும்சமயம் வலி அதிகமாகிவிட்டது.
அந்த நேரம் பார்த்து அதே பகுதியை சார்ந்த 108 ஆம்புலன்ஸ் டெக்னீஷியன் ஒருவர் அதே பூத்திற்கு ஓட்டு போட வந்திருக்கிறார். பிரவச வலியில் நீலாவதி துடிப்பதை பார்த்ததும், உடனடியாக அந்த இடத்திலேயே பிரசவம் பார்ப்பது நல்லது என அறிவுறுத்தி உள்ளார். உடனே உறவினர்களின் உதவியுடன் நீலாவதிக்கு சுக பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தை... இதை பார்த்ததும் வாக்கு சாவடியில் இருந்தவர்கள் எல்லோருமே சந்தோஷம் ஆனார்கள்.
இதையடுத்து அங்கிருந்த 108 ஆம்புலன்சில் நீலாவதி, குழந்தையை ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்போது தாயும் சேயும் சௌக்கியமாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஓட்டு போட சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அங்கு பரபரப்புடன் கூடிய மகிழ்ச்சியை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications