அப்படியே சிப்காட்டாக மாறும் 3,174 ஏக்கர் விவசாய நிலம்! விவசாயிகள் மீது குண்டாஸா? சீமான் ஆவேசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அமையவுள்ள 'மேல்மா சிப்காட்' திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு பூவுலகின் நண்பர்கள், சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் 'சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்' செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரிசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.
அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் 'மேல்மா சிப்காட்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் 125 நாட்கள் கடந்தும் தற்போது வரை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து இது குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதில்,
"பச்சையப்பன் என்பவர் ஒரு "குண்டர்" எனத் தீர்மானித்து அவரை பார்வையில் கானும் இவ்வலுவலக ஆணையின்படி 1982-ம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் குடிசைப்பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் எண். 14/1982)-ன் கீழ் அவர் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதி பராமரிப்பிற்கு குந்தகமாக செயல்படுவதைத் தடுக்கும் பொருட்டு மதுரை மத்தியச் சிறையில் தடுப்புக்காவலில் 15.11.2023 முதல் வைக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கூறுகையில், "திருவண்ணாமலையில் அமையவுள்ள மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து, தங்கள் நிலவுரிமைக்காக அமைதி வழியில் போராடிவரும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் முன்பாக தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.
125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் மக்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறவழியில் போராடும் விவசாயிகளை சமூக விரோதிகள்போல பாவித்து குண்டாஸ் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களை பயன்படுத்துவது ஜனநாயக விரோதமானது. இது அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற உரிமையை மறுக்கின்ற செயலாகும். தமிழ் நாடு அரசு தொடர்ச்சியாக புதிய தொழிற் திட்டங்களை சென்னையைச் சுற்றியுள்ள மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலே அதிகப்படியாக முன்னெடுத்து வருகிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் விவசாய நிலங்களிலே கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையப்படுத்துவதற்கான புதிய சட்டம் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விவசாய நிலங்கள் வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தக் கூடாது என கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டமும் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டமும் மக்களின் அனுமதியோடும், கலந்தாலோசனையின் அடிப்படையிலும் மட்டுமே எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது.
குறிப்பாக திட்டத்தின் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை ஆகிய செயல்பாடுகளில் திட்டத்தால் பாதிப்படையக்கூடிய மக்களின் கருத்துகளும், ஆலோசனையும் முதன்மையானது என சட்டங்கள் கூறுகின்றன. இவற்றை மீறுகின்ற வகையில் மக்களின் பேச்சுரிமை, ஒன்று கூடுதலுக்கான உரிமை, மாற்றுக் கருத்தைப் பதிவு செய்வதற்கான உரிமை ஆகியவற்றை மறுக்கும் வண்ணம் தமிழ் நாடு அரசின் செயல்பாடுகள் இருப்பது கண்டனத்துக்குரியது. ஆகவே, கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து,குண்டாஸ் முடிவை கைவிட வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மேல்மா சிப்காட் திட்டத்துக்கு எதிராக, தங்கள் நிலவுரிமை காக்க அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்னர்.
அதேபோல, "அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications