ஒரேநேரத்தில் 5 பேரிடம் தங்கதாலி பறிப்பு.. கதறிய பெண்கள்.. திருவண்ணாமலை திருக்கல்யாணவிழாவில் கண்ணீர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த திருக்கல்யாண விழாவில் 5 பெண்களிடம் 25 சவரன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்கள் அழுத நிலையில் மஞ்சள் கயிற்றை தாலியாக அணிந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தெய்வத்துக்கு உகந்த மாதத்தில் ஆடிமாதம் ஒன்றாகும். இந்த மாதத்தில் பல கோவில்களில் ஆடி திருக்கல்யாண விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் நடந்த திருக்கல்யாண விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்களிடம் மர்மகும்பல் தங்க தாலி பறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
திருக்கல்யாண விழா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏசிஎஸ் நகரில் புதிதாக ஸ்ரீ வெங்கடஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவில் கோவில் எதிரே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் ஸ்ரீவெங்கடஜலபதி திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
5 பெண்களிடம் தாலி செயின் பறிப்பு
இதில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். குறிப்பாக திருகல்யாண நிகழ்வு என்பதால் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய கும்பல் தங்கசங்கிலி பறிப்பை அரங்கேற்றியது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை பயன்படுத்திய மர்மகும்பல் மூதாட்டிகள் உள்பட 5 பெண்கள் அணிந்திருந்த தாலி சங்கிலிகளை பறித்து சென்றது.
25 சவரனை பறிகொடுத்த பெண்கள்
அதன்படி மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ரமணியின் தங்க செயின், மோசூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி திலகவதியின் 5 சவரன் தாலி செயின், ஆரணி டவுன் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த வெள்ளச்சி என்ற மூதாட்டியின் 7 சவரன் தங்க சங்கி பறிக்கப்பட்டது. மேலும், கலசபாக்கம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரியின் 5 சவரன் தாலி செயின், மொரப்பதாங்கல் கிராமத்தை சேர்ந்த தமிழரசி 3 சவரன் தாலி செயினையும் இழந்தனர். 5 பெண்களிடம் மொத்தம் 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
மஞ்சள் கயிறு அணிந்த பெண்கள்-சோகம்
திருக்கல்யாண விழாவுக்கு வந்து தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண்கள் கதறி அழுதனர். மேலும் அவர்கள் மஞ்சள் கயிற்றை தாலியாக அணிந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.