கார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பட்டன. பக்தர்கள் தங்களின் வீட்டில் இருந்த படி விழா நிகழ்வுகளை தரிசனம் செய்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications