"மாற்றம் எல்லாம் தானாக வராது! மானத்தமிழ் பிள்ளைகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்!" சொல்கிறார் சீமான்
திருவண்ணாமலை: நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.
Recommended Video
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய சீமான் பல்வேறு விஷயங்கள் குறித்தும் மிக விரிவாகப் பேசினார்.

சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், "தெற்கே இலங்கை, வடக்கே கங்கை, குடதிசையில் மகோதை, குணதிசையில் கடாரம் இவற்றையெல்லாம் வென்று தன் பெருமிதத்தை நிலைநாட்டிய அரசனுக்கு அரசன் நம் அருமைப் பெரும்பாட்டன் அரசேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவைப் பெருமிதத்தோடும் திமிரோடும் நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பிரம்மதேயம் என்கிற வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த கிராமத்தில், நம்முடைய பாட்டனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

ரத்தமே வடியும்
தமிழினம் வரலாற்றிலிருந்து எவ்வளவு தூரம் மறைக்கப்பட்டு உள்ளது என்பதற்குப் பாட்டனார் அரசேந்திர சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும், அவரது தந்தையான ராஜராஜன் எனப்படும் அருண்மொழி சோழன் அடக்கம் செய்யப்பட்ட உடையாளூரை சென்று பார்க்கும் போதும் உணர முடியும். இதையெல்லாம் பார்க்கும் போது அறம், மானம், வீரம் ஆகிய மூன்றையும் உயிரென்று வாழும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கண்ணில் நீர் வடியாது, மாறாக ரத்தமே வடியும்.

அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்
இங்கு அண்டிப் பிழைக்க வந்தவர்கள்; நம் மீது அதிகாரம் செலுத்திக் கொழுத்தார்கள்.. ஆனால் இப்போது அவர்களுக்கு உலகப் புகழ்பெற்ற சென்னை கடற்கரையில் 3 ஏக்கர் நிலத்தில் பல கோடி செலவில் சமாதி கட்டி அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், பெருமைக்குரிய நமது பாட்டானார்களின் நினைவிடம் சிறிய கூரைக்கு இருக்கிறது. இது ஒவ்வொரு தமிழ் மகனும் வெட்கி தலை குனிய வேண்டிய இழிநிலையாகும். இதை மாற்றுவதற்காவது மானத்தமிழ் பிள்ளைகள் நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

சமஸ்கிருத கலப்பு
சோழர் கால ஆட்சியைப் பொற்காலமாக மாற்றிய ராஜராஜன் என்னும் அருண்மொழி சோழன் அரசனுக்கு அரசன், மாமன்னன் என்றே இருக்க வேண்டும். ஆனால் சமஸ்கிருதத்தை உள்வாங்கியதால் அரசன் என்று இருக்க வேண்டிய இடத்தில் ராஜன் என்ற சொல் இருக்கிறது. அரசனுக்கு அரசன் என்பது ராஜராஜனாக மாறிவிட்டது. அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இதற்காகப் பதாகைகளில் அரைவட்டத்திற்குள் ராசேந்திர சோழன் என்றும் அதற்கு மேலே பெரிதாக அரசனுக்கு அரசன் அரசேந்திர சோழன் என்றும் எழுதி வருகிறோம்.

மாற்றம் எல்லாம் தானாக வராது
மாற்றம் எல்லாம் தானாக வராது. நாம் தான் கொண்டு வர வேண்டும். இது நமக்கான காலம். தொடக்கத்தில் ஜில்லா என்றார்கள். இப்போது தான் மாவட்டம் எனச் சொல்கிறார்கள். அதேபோல போலத் தான் நாம் வருவதற்கு முன்பு தொலைக்காட்சிகளில் லைவ் என ஒளிபரப்பானது. இப்போது அது நேரலை ஆகி உள்ளது. 'பிரசாரம்' கூட நாம் தமிழர் பிள்ளைகள் வந்த பின்னர் தான் பரப்புரை ஆனது.

வரலாறு முக்கியம்
சோழர்களைப் பற்றிப் பேசக் காரணம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறு தான் வழிகாட்டும். அம்பேத்கர் சொல்வதைப் போல, வரலாறு படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றைப் படித்து நாம் எங்கு வாழ்ந்தோம், எங்கு வீழ்ந்தோம் என்பதை அறிந்து கொள்ளாமல் நம்மால் எழுச்சி பெறவே முடியாது. வரலாறு என்பது வெறும் வார்த்தை அல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம்.

சேர- சோழ- பாண்டியர்
சேர- சோழ- பாண்டியர் மூவரும் சேர்ந்து இருந்தால் உலகமே தமிழர் நிலமாகி இருக்கும். ஆனால், இவர்கள் சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் செய்தார்கள். எங்களைப் பறை அடிக்கக் கூடாது எனத் தடுக்கிறீர்கள்; பறை என்பது வெறும் பறை அல்ல, என் இனத்தின் எழுச்சிமிகு குறியீடு. எங்கள் முழக்கமே, 'இது ஆதித்தமிழ் பறையடா, அதை அடித்துப் பகை முகத்தில் அறையடா' என்பது தான். பேரம் பேசி, காசு வாங்கிக்கொண்டு, சீட்டு வாங்கி கட்சி நடத்தும் கோழைகள் அல்ல நாங்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications