திருவண்ணாமலையில் மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய சிறுவன் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் பெண்கள், குழந்தைகல் உள்பட 7 பேர் சிக்கிகொண்டனர். கடந்த 20 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வரும் நிலையில் சிறுவன் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 2 பேரின் உடல்கள் பாறைக்குள் சிக்கியுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல் புயல் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் நேற்றைய தினம் கடுமையான மழை பெய்தது.

இந்த தாக்கத்தால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரத்தில் உள்ள மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதையுண்டன.
அந்த பகுதியில் வஉசி நகர் 11 ஆவது தெருவில் மலையடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் மண் சரிவில் சிக்கியது. மேலும் வீடுகள் மீது பாறைகளும் விழுந்ததது. அப்போது வீடுகளில் இருந்த ராஜ்குமார் (32), மீனா (26), இனியா (6), மகா (12), கவுதம் (8), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் கிடைத்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மண் சரிவு காரணாமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இவர்களை மீட்க 35 பேர் வரவழைக்கப்பட்டு இன்று 2 ஆவது நாளாக தேடப்பட்டு வந்தனர். இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேரும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 20 பேரும் என மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால் அங்குள்ள பாறைகள் உருண்டு வந்து மேலும் ஆபத்து ஏற்படும் என்பதால் ஜேசிபி, வைத்து மணலை அப்புறப்படுத்தி வந்தனர். மண்ணில் புதைந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆவதால் அவர்களது நிலை என்னவென தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் மகாதீபாம் ஏற்றும் மலையில் இன்றும் இரு முறை மண் சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் மேலும் சில வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இருள் சூழ்ந்த நிலையிலும் தற்போது ஜேசிபியை வைத்து மணலை எடுத்த போது ஒரு சிறுவனின் சடலம் தட்டுப்பட்டது. இதையடுத்து அந்த சடலத்தை வெளியே எடுத்தனர். இதை பார்த்ததும் பேரிடர் மீட்பு படையினர் கண்கலங்கினர்.
இந்த இடத்திலேயே மற்றவர்களும் இருக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக வேறு வகையில் மண்ணை அள்ளும் பணிகள் நடந்து வந்தது. மண்ணில் புதைந்த 7 பேரும் உயிருடன் மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் இருவரது உடல்களும் கிடைத்தன. அடுத்தடுத்து மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மொத்தம் 7 பேரில் 5 பேரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ராஜ்குமார், மீனா, கவுதம், இனியா, மகா ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எஞ்சிய ரம்யா, வினோதினி 2 பேரை மீட்க மீட்பு குழுவினர் போராடி வந்தனர். ஆனால் அவர்களது உடல் பாறைகளுக்குள் சிக்கியிருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டத். தொடர்ந்து பாறையை அகற்றும் பணி நடந்து வந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்த பார்வையிட்டார். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மீட்பு பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை மீட்பு பணிகள் தொடரும் என்று அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications