4 வயது சிறுமியை சாக்லேட் கொடுத்து சீரழித்த மிருகம்.. மனைவியையும் கைது செய்க..கொந்தளித்த அன்புமணி!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இந்த மிருகத்தனமான செயலை செய்த காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம். இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி.
மேலும், கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றலயே.. டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவது நியாயமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தனியார் பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே கெங்கை சூடாமணியைச் சேர்ந்த தம்பதியினரின் மகள் வீட்டுக்கு அருகே உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார். இந்த பள்ளியை உலகுபட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார். தனது மனைவி நடத்தும் பள்ளிக்கு காமராஜ் அடிக்கடி வருவது வழக்கம்.
கொடூர சம்பவம்
இந்நிலையில் கடந்த வாரம் 4 வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டனர். இதில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியிடம் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. பள்ளி தலைமையாசிரியை பிரபாவதியின் கணவர் காமராஜ் அந்தச் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போளுர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் தலைமறைவான அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் என்பவரை திருச்செந்தூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
அன்புமணி வேதனை
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் அறியாத மழலைக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்தவர்களை மனித ஜென்மமாகவே கருத முடியாது.
மிருகத்தனமான செயல்
அதிலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு! குழந்தையை சீரழித்த ஆசிரியர் காமராஜ் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இது போதுமானதல்ல. அவர் உடனடியாக வெளியில் வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்; போக்சோ வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
தாளாளரையும் கைது செய்ய வேண்டும்
பள்ளியின் தாளாளர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்க முடியாது. கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தாங்க முடியாமல் பள்ளி வளாகம் முன் பொதுமக்கள் கூடியிருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. உயரதிகாரிகளை அங்கு அனுப்பி பதற்றத்தை தணிக்கவும், இயல்பு நிலையை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.