நரித்தனம்.. சிறுபான்மையினர் மீது திடீர்னு பாசம் பொங்கி வழியுதே.. எடப்பாடியை வெளுத்தெடுத்த ஸ்டாலின்!
திருவண்ணாமலை: பா.ஜ.க கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி 'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், "நான்காண்டு காலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல! அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்!

அவரின் ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறைகயிலும் முதலிடம் பிடித்ததாம். பழனிசாமி சொல்கிறார். நாம் கேட்பது, சொந்தமாக விதைத்து அறுவடை செய்வதுதான் பெருமை! மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் - போராடிய ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் பேசிய - போலி விவசாயி பழனிசாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? உண்மையில், அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது! இதுதான் வரலாறு!
போதைப் பொருளான குட்கா விற்க லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டிற்கே ரெய்டு வந்ததை மறைக்க முடியுமா? சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது!தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காக்கை குருவிகளை சுடுவது போல 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்களே பழனிசாமி... உங்கள் முகத்திரைதான் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் அப்பட்டமாகக் கிழிந்து தொங்கியதே! மறந்துவிட்டீர்களா?
எல்லாவற்றுக்கும் மேல், பொல்லாத ஆட்சி - அதற்குப் பொள்ளாச்சியே சாட்சி என்று தமிழ்நாடே கொதித்ததே மறந்துவிட்டதா? பொள்ளாச்சி பாலியல் கொடுமை நெஞ்சில் ஈரம் இருக்கும் எல்லோரையும் கதற வைத்தது... ஆனால் பழனிசாமி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை... இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம். இதையெல்லாம் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் திருவாளர் பழனிசாமி.
தி.மு.க. குடும்பக் கட்சியாம்! ஆமாம், குடும்பக் கட்சிதான்! அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், தி.மு.க. குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை வாழவைக்கும் கட்சி, தி.மு.க. பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய பாதையில், ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கிய கட்சி, தி.மு.க.!
பச்சைப் பொய் பழனிசாமி அவர்களே! சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, ஹைகோர்ட் - சுப்ரீம் கோர்ட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்! பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி 'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த தி.மு.க.வினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார், பா.ஜ.க.விற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்! "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்?" என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, 'கூட்டணி தர்மம்' என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள், "மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார்?" பா.ஜ.க.வை விமர்சிக்காமலேயே பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம்! இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும்.












Click it and Unblock the Notifications