பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி.. ரூ.10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றத்தில் கடை உரிமையாளர் உறுதி
திருவண்ணாமலை: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக ஆரணி பிரியாணி கடை உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சாலை பகுதியில் செவன் ஸ்டார் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
காதர் பாஷா என்பவர் இந்த பிரியாணி கடையை நடத்தி வந்தார். துந்தரீகம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோருடன் செப்டம்பர் 8-ம் தேதி செவன் ஸ்டார் பிரியாணி கடைக்கு வந்தார்.

சிறுமி உயிரிழப்பு
பின்னர் அவர்கள் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை சாப்பிட்டு வீடு திரும்பினார்கள். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தீராத வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

பிரியாணி கடை உரிமையாளர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரியதர்ஷினி இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோரை செப்டம்பர் 12-ம் தேதி கைது செய்தனர்.

ரூ.10 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ''உணவகத்தை தரமாக பராமரித்து வருகிறோம். கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தயாராக உள்ளோம்.

காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்
இதனை தொடர்ந்து தெரிவித்த நீதிபதி 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடுள்ளார்.












Click it and Unblock the Notifications